தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க எதிர்ப்பு: கர்நாடகத்தில் விவசாயிகள் சங்கம் போராட்டம்
மண்டியா: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடகம் புறக்கணிக்க வேண்டும் என்றும், தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்கக் கூடாது என்றும் கர்நாடக அமைப்புகள் எச்சரித்துள்ளன.
காவிரி ஹிதரக்ஷன சமிதி அமைப்பு என்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவரான மாதே கெளடா கூறுகையில், ஆட்சியில் இருப்பவர்கள் மக்களுக்காக சிறைக்குச் செல்லத் தயாராக இருக்க வேண்டும். கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்கக் கூடாது. தமிழகத்துக்கு தண்ணீரை வழங்கக் கூடாது.
கர்நாடகத்தில் வறட்சி நிலவி வரும் நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் தரக் கூடாது. மீறி நீரைத் தந்தால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அரசே பொறுப்பு என்றார்.
விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கே.எஸ்.புட்டணய்யா கூறுகையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு 7,400 கன அடி நீர் போய்க் கொண்டுள்ளனது. இது தவிர மழை நீரும், அணையிலிருந்து லீக் ஆகும் நீரும் தமிழகத்துக் கிடைத்துக் கொண்டுள்ளது என்றார்.
மண்டியாவில் போராட்டம்:
இந் நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதை எதிர்து மண்டியா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன.
பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையை விவசாயிகள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தண்ணீர் திறக்கப்படாது-அமைச்சர் பசவராஜ் பொம்மை:
இந் நிலையில் எக்காரணம் கொண்டும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படாது என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். இவர் முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மையின் மகன் ஆவார்.
அனைத்துக் கட்சிக் கூட்டம்:
இந் நிலையில் வரும் 19ம் தேதி காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டம் பிரதமர் தலைமையில் நடக்கவுள்ளதையடுத்து அது குறித்து விவாதிக்க இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கர்நாடக அரசு கூட்டியுள்ளது.