பிரதமர் நாளை கேரளா வருகை: கறுப்புக்கொடி காட்ட கூடங்குளம் போராட்டக்காரர்கள் திட்டம்
கொல்லம்: 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் நாளை கேரளா செல்கிறார். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை கேரளா செல்கிறார். அங்கு அவர் கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்தை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து கேரள முதலீட்டார்கள் சந்திப்பு கூட்டத்தை தொடங்கி வைத்து அதில் உரை நிகழ்த்துகிறார்.
இதனை அடுத்து திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கலா மண்டலம் நிகர்நிலை பல்கலைகழகத்தில் நாளை நடக்கும் தென்னிந்திய கலை அருங்காட்சியக நிகழ்ச்சியையும் அவர் தொடங்கி வைக்கிறார். அதன் பின்பு கேரள பத்திரிக்கையாளர் சங்கத்தின் 50வது ஆண்டு விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார்.
கூடங்குளம் அணு மின் நிலையம் திறக்கவும், யுரேனியம் நிரப்பவும் எதிர்ப்புகள் ஏற்பட்டு தமிழகத்தின் தென்மாவட்ட பகுதிகள் கலவர பூமியாக மாறியுள்ள நிலையில் இருமாநில எல்லை பகுதியான கொச்சிக்கு வரும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கறுப்புக் கொடி காட்ட அணு மி்ன் நிலைய எதிர்ப்புக் குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையடுத்து பிரதமர் செல்லும் இடங்களில் போலீசாரும், கமாண்டோ படை வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். கூடங்குளம் அணு உலை பிரச்சனை தமிழக கடலோர பகுதிகள் மட்டுமின்றி கேரள கடலோர பகுதிகளுக்கும் பரவி வரும் நிலையில் பிரதமர் பயணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications