உதயக்குமார் சரண் அறிவிப்பு... இடிந்தகரையில் கிராம மக்கள் அவசர ஆலோசனை
கூடங்குளம் போராட்டம் நேற்று பெரும் கலவரத்தில் போய் முடிந்தது. இதையடுத்து அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் உள்ளிட்ட போராட்டக் குழுத் தலைவர்கள் தலைமறைவாகி விட்டனர்.
அவர்களைப் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்களை காவல்துறையினரிடமிருந்து காப்பதற்காக போலீஸில் சரணடையத் தயார். முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் முன்னிலையில் இன்று இரவு சரணடையத் தயார் என்று உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இடிந்தகரையில் இன்று ஊர் மக்கள் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் 20க்கும் மேற்பட்ட போராட்டக் களத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் உதயக்குமாரின் அறிவிப்பு குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் உதயக்குமாரின் செய்தியும் கூறப்பட்டது. அதாவது தான் ஊர் மக்களின் முடிவுக்குக் கட்டுப்படுவதாகவும், அவர்களின் முடிவை அறிய ஆவலாக உள்ளதாகவும், ஒரு வேளை சரணடைவதாக இருந்தால் இடிந்தகரை மக்களை வந்து சந்திக்க விரும்புவதாகவும் உதயக்குமார் கூறியுள்ளாராம்.