பாதி இதயத்துடன் நான்கரை மாதம் வாழ்ந்த பெண் குழந்தை: டாக்டர்கள் ஆச்சரியம்
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆசிரியை நிக்கோலா(28). அவருக்கு நதானியல் என்ற 23 மாத ஆண் குழந்தையும், ஸ்கார்லட் டௌகன் என்ற நான்கரை மாத பெண் குழந்தையும் உள்ளது. ஸ்கார்லட் அவளது அண்ணனைப் போன்று மகிழ்ச்சியாக இல்லாமல் எப்பொழுதும் அழுது கொண்டே இருந்திருக்கிறாள். மேலும் இரவிலும் சரியாகத் தூங்குவது இல்லை. இதையடுத்து நிக்கோலா தனது மகளை குழந்தைகள் நல மருத்துவரிடம் தூக்கிச் சென்றுள்ளார்.
அவர் ஸ்கார்லட்டை கிளாஸ்கோவில் உள்ள யார்க்ஹில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. ஏனென்றால் குழந்தைக்கு பாதி இதயம் தான் இருந்தது. வலப்பக்க இதயம் வளரவே இல்லை. அதனால் குழந்தையின் நுரையீரலுக்கு போதிய ரத்தம் செல்லவில்லை.
இத்தகைய குறைபாடுடைய குழந்தை இத்தனை மாதங்கள் டாக்டர்கள் உதவியின்றி வாழ்ந்ததே பெரிய அதிசயம் என்று டாக்டர்கள் கூறியதாக நிக்கோலா தெரிவித்தார். இதையடுத்து குழந்தைக்கு இரண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஸ்கார்லட் பருவ வயதை அடைந்த பிறகு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது நலமாக உள்ள ஸ்கார்லட் பிற குழந்தைகளைப் போல இயல்பாக இருக்க முடியும் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.