எஸ்.பி.யை சிறைவைத்து கொளுத்திவிடுவேன் என்று மிரட்டிய சஸ்பெண்டான ஏட்டு
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் ஏட்டாக இருப்பவர் கிரிபிரசாத் சர்மா. அவர் மீது புகார் எழுந்ததையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று மாலை ஹைதராபாத் எஸ்.பி. லக்ஷ்மி நாராயணாவுக்கு போன் செய்து கூடுதல் எஸ்.பி. விஜயகுமார் தன்னை சஸ்பெண்ட் செய்ததால் வாழ்க்கை வெறுப்பாக இருப்பதாகவும், அதனால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் தெரிவி்ததார்.
இதைக் கேட்டு அதிர்ந்த லக்ஷ்மி நாராயணா அவரை தற்கொலை செய்ய வேண்டாம் என்று கூறினார். ஏட்டு இருக்கும் இடத்தை கேட்டறிந்த அவர் பிர்லா ஆடிட்டோரியம் அருகே உள்ள சைலஜா மினரல் வாட்டர் கடைக்கு சென்றார். அந்த கடைக்குள் எஸ்.பி. நுழைந்ததும் ஏட்டு ஷட்டரை மூடினார். பிறகு லக்ஷ்மி நாராயணாவை சேரில் உட்கார வைத்து கையைக் கட்டிப் போட்டார்.
இதையடுத்து தான் எஸ்.பி.யை பிணையக் கைதியாக வைத்துள்ள விஷயத்தை சில தொலைக்காட்சி சேனல்களுக்கு இரவு 7.30 மணிக்கு அவர் எஸ்.எம்.எஸ். அனுப்பினார். அந்த கடைக்குள் அவர் 40 லிட்டர் பெட்ரோல் வைத்திருந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு கூடிவிட்டனர். ஆனால் யாராவது ஷட்டரை உடைத்து கடைக்குள் நுழைய முயன்றால் எஸ்.பி.யை தீவைத்துக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டினார்.
இதற்கிடையே அங்கு தீயணைப்பு வீரர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் வந்தனர். அதன்பிறகு அவர் தனது கோரிக்ககைகளை தெரிவி்த்தார். 16 ஆண்டுகளாக காவல் துறையில் பணியாற்றும் தன்னை கூடுதல் எஸ்.பி. விஜயகுமார் அவமானப்படுத்திவிட்டதாகவும், அவரை உடனே சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும், தனது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றார். இது குறித்து உள்துறை அமைச்சரோ, டிஜிபியோ உடனே தனக்கு பதில் அளிக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து டிஜிபி ஏட்டை தொடர்பு கொண்டு அவரது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்தார். முன்னதாக ஆந்திர உள்துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி ஏட்டை தொடர்பு கொண்டு கூடுதல் எஸ்.பி. மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததோடு எஸ்.பி. லக்ஷ்மி நாராயணாவை விடுவிக்குமாறு வலியுறுத்தினார்.
இதையடுத்து சுமார் 4 மணிநேரம் கழித்து நள்ளிரவு 11.15 மணிக்கு அவர் எஸ்.பி.யை விடுவித்தார். ஆந்திர மாநில காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு அருகே நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.