அணு உலை உயிரை குடிக்கின்ற எமன், அதை இயங்கவிட மாட்டேன்: வைகோ
நெல்லை மாவட்டம் உவரியில் மணபாட்டில் நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் மீனவர் அந்தோணி ஜான் கொல்லப்பட்டதை கண்டித்தும், கூடங்குளத்தில் போலீஸ் தடியடி நடத்தியதைக் கண்டித்தும், கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூடக் கோரியும் மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் இருந்து வருகின்றனர். நேற்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் நடந்தது.
உவரியில் உள்ள 200க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தது. உண்ணாவிரதப் போராட்டத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பழரசம் கொடுத்து முடித்து வைத்தார்.
அதன் பிறகு அவர் பேசியதாவது,
மக்கள் சக்திக்கு முன் எதுவும் நிற்காது. கூடங்குளம் அணு உலையை இயக்கக் கூடாது. அணு உலையில் யுரேனியத்தை நிரப்பக் கூடாது. அணு உலை உயிரை குடிக்கின்ற எமன். கடற்கரை மக்கள் அவர்களுக்காக போராடவில்லை. தமிழக மக்களுக்காக போராடுகிறார்கள். குழந்தைகளை முன்னிருத்தி போராட்டம் நடத்துவதாக கூறுகிறார்கள். குழந்தைகள் தான் எதிர்கால சந்ததியினர். இந்த அணு உலையை நிச்சயமாக இயங்கவிட மாட்டேன். அணு உலையை நிறுத்துவதாக முதல்வர் அறிவிக்க வேண்டும்.
ரூ.13,000 கோடி செலவாகி இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழல், தற்போது கிரானைட் ஊழல் அவற்றை எல்லாம்விட இந்த ரூ.13,000 கோடி பெரிய தொகை அல்ல. முன்னாள் முதல்வர் தமிழக மக்களை நேசிப்பவர் அல்ல. அவர் தன் மக்களை மட்டும் நேசிப்பவர். இந்த உண்ணாவிரதம் உண்மையான உண்ணாவிரதம். உங்களுடன் கடைசிவரை நின்று போராடுவேன் என்றார்.
முன்னதாக அவர் துப்பாக்கிச்சூட்டில் பலியான மணப்பாடு மீனவர் அந்தோணி ஜானின் வீட்டுக்கு சென்று அவரது மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிவிட்டு மதிமுக சார்பில் ரூ.50,000 வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மருந்து வாங்க கடைக்குச் சென்ற அந்தோணி ஜான் துப்பாக்கிச்சூட்டில் பலியானார். இந்த சம்பவம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை வைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.