டீசல் விலையை கொஞ்சம்தான் உச்சத்தியிருக்கோம்..: வக்காலத்து வாங்கும் நாரயணசாமி
சென்னை: வரலாறு காணாத வகையில் டீசல் விலையை ஒரேயடியாக ரூ5க்கு உயர்த்தியதால் நாடே கொந்தளித்துக் கிடக்கும் நிலையில், டீசல் விலைய "சற்றுதான்" உயர்த்தியிருப்பதாக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி வக்காலத்து வாங்கி வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை மத்திய அரசு அனுமதித்ததில் தவறு எதுவும் இல்லை. விவசாயிகள், வியாபாரிகள், பொது மக்கள் நலன்கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள். நம் நாட்டில் இடைத் தரகர்கள்தான் கொள்ளை அடித்து வருகின்றனர். வியாபாரிகள் இனி நேரடியாக கொள் முதல் செய்வதால் பொது மக்களுக்கும் தடையின்றி குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும். இதன் மூலம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியும்
மாநில அரசுகள் விருப்பப்பட்டால் இந்த சட்டத்தை அமல்படுத்தலாம். கச்சா எண்ணை விலை அதிகரித்துள்ளதால் மத்திய அரசு டீசல் விலையை சற்று உயர்த்தியுள்ளது. மத்திய அரசு டீசலுக்கும் சமையல் எரிவாயுக்கும் மானியம் வழங்குவது நீடித்தால் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் பாதிக்கும். எனவே தான் சிறிதளவு விலையை உயர்த்தி உள்ளோம் என்றார் அவர்.