'டெலிபதி' மூலம் மனைவியைக் கற்பழித்து விட்டார்...பக்கத்து வீட்டுக்காரரை சுட்ட கணவர்!
சென்டர்வில்லி, உடா: அமெரிக்காவின் சென்டர்வில்லி என்ற நகரில் தனது மனைவியை டெலிபதி மூலம் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறி பக்கத்து வீட்டுக்காரரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். அந்த நபரை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர்.
அந்த துப்பாக்கி பார்ட்டியின் பெயர் மைக்கேல் செலினட். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் டோனி பியர்ஸ். இந்த பியர்ஸைத்தான் மைக்கேல் சுட்டு விட்டார்.
54 வயதாகும் மைக்கேல், தனது மனைவியை பியர்ஸ் டெலிபதி முறை மூலம் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக தனக்குத் தெரிய வந்ததால், சுய பாதுகாப்புக்காக பியர்ஸை சுட்டதாக கூறியுள்ளார்.தனது மனைவியை டெலிபதி மூலம் பலமுறை பியர்ஸ் பலாத்காரம் செய்ததாகவும், தன்னையும் டெலிபதி மூலம் மிரட்டியதாகவும் கோர்ட்டில் கூறியுள்ளார் மைக்கேல்.
இதையடுத்து கொலை முயற்சி, சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் மைக்கேலை போலீஸார் கைது செய்தனர்.
இளம் வயதில் மைக்கேல் சாலை விபத்தில் சிக்கியுள்ளார். அப்போது அவருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் மைக்கேல் இவ்வாறு நடந்து கொண்டதாகவும், இதுபோல பலமுறை அவர் மன ரீதியான பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளதாகவும் மைக்கேலின் வ்ககீல் கூறியுள்ளார்.
டாக்டர்களும், மைக்கேல் மன ரீதியாக உடல் நலம் சரியில்லாதவர் என்று கூறியுள்ளனர். அவர் தனது வாழ்நாள் முழுவதும் இப்படித்தான் இருப்பார் என்றும் அவரை குணப்படுத்த முடியாது என்றும் அவர்கள் சான்றளித்துள்ளனர்.