காவிரி பிரச்சனை: 6ம் தேதி கர்நாடகத்தில் பந்த்; பெங்களூர் உள்பட மாநிலமே ஸ்தம்பிக்கும்!
பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையம், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு உச்சநீதிமன்றமும் ஆதரவு தெரிவித்தது. இதனால் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதனால் கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மைசூர், மண்டியா மாவட்டங்களில் விவசாயிகள், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு கன்னட அமைப்புகள், அரசியல் கட்சிகள், திரைப்பட துறை ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.
மைசூரில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை அருகே நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட ரகளையில், போலீசார் தடியடி நடத்தினர். நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து மைசூர், மண்டியா பகுதியில் பதட்டம் நீடிக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில் வரும் 6ம் தேதி முதல் காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்தும், தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரை நிறுத்த கோரியும், மாநிலம் தழுவிய பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கன்னட அமைப்புகள், திரைப்பட துறையினர், போக்குவரத்து கழகங்கள், அரசியல் கட்சிகள் என்ற பலதரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பந்த்திற்கு ஆதரவை திரட்டும் வகையிலும், தமிழகத்திற்கு திறக்கப்பட்ட காவிரி தண்ணீரை உடனடியாக நிறுத்த கோரியும், காவிரி ஷிதரக்ஷ்னா சமதி தலைவர் மாதே கவுடா இன்று முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் துவங்க போவதாக அறிவித்திருந்தார். ஆனால் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் வேண்டுகோளை ஏற்று அதை ரத்து செய்தார்.
இதேபோல நாளை பெங்களூரில் பேரணி ஒன்றை நடத்த கர்நாடக ரக்ஷணா வேதிகே தலைவர் நாராயண கவுடா அழைப்பு விடுத்துள்ளார். இதில் முன்னாள் முதல்வர் எதியூரப்பாவும் கலந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரியில் பிரச்சனையில் பெங்களூரில் மக்களின் ஆதரவைத் திரட்டும் வகையில் இந்த பேரணி நடைபெற உள்ளதாக கர்நாடக ரக்ஷணா வேதிகே அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்தப் பேரணி பெங்களூர் பசவனகுடி நேஷனல் கல்லூரியில் இருந்து பேரணி துவக்கப்பட்டு, ராஜ்பவனில் முடிவடையவுள்ளது.
இந்த நிலையில் காவிரி நதியின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு நியமித்துள்ள குழு, இன்று கர்நாடகாவிற்கு வரலாம் என்று தெரிகிறது. அக்குழுவினர் காவிரி நதியின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.
காவிரி நதி திறந்துவிடுமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு கர்நாடகா அரசு மீண்டும் மனுதாக்கல் செய்துள்ளது. இந்த நிலையி்ல் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூர் தமிழ் சங்கமும் வரும் 6ம் தேதி நடைபெற உள்ள பந்த்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பந்த்தைக் காரணமாக வைத்து தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஏதும் நடந்துவிடாமல் தடுக்க தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.