சென்னை கடற்கரையில் தாறுமாறாக ஓடிய பஸ்.. வாலிபர் பலி: 4 பேர் படுகாயம், வாகனங்கள் சேதம்
சென்னை: சென்னையில் கலங்கரை விளக்கம் அருகே அரசு மாநகரப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஓடி வாகனங்கள் மீது மோதியதில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர்.
சென்னை பெசன்ட் நகரில் இருந்து திருவொற்றியூர் சுங்க சாவடிக்கு, 6ஏ வழித்தட அரசு பஸ் சென்றது. பகல் 12 மணியளவில் அந்த பஸ் மெரீனா கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தது. கலங்கரை விளக்கம் எதிரே அகில இந்திய வானொலி நிலையம் அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல பஸ்சை டிரைவர் வேகமாக ஓட்டினார்.
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. எதிரே வந்த 3 மோட்டார் சைக்கிள்களை இடித்து தள்ளிய பஸ், ஒரு கட்டிடத்தில் மோதி நின்றது. பஸ் பசுவேகத்தில் தாறுமாறாக வருவதை கண்ட வாகன ஓட்டிகள் அலறினர்.
பஸ் நின்றதும் டிரைவரும், கண்டக்டரும் இறங்கி ஓடிவிட்டனர். பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்த பலர் காயத்துடன் ரோட்டில் கிடந்தனர். ஒருவர் பஸ்சுக்கு அடியில் மோட்டார் சைக்கிளுடன் பஸ் டயரில் சிக்கி பிணமாக கிடந்தார். அவர் பெயர் விவரம் உடனடியாகத் தெரியவில்லை.
காயமடைந்தவர்களில் ஒரு பெண்ணும் அடக்கம். அவரையும் மேலும் 3 பேரையும் ஆம்புலன்சில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
விபத்து குறித்து, அடையாறு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய டிரைவர், கண்டக்டரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவுகிறது.