தொடரும் துரை தயாநிதி வேட்டை- மு.க. அழகிரியின் அமெரிக்க மருமகனுக்கு சம்மன்
மதுரை: கிரானைட் கொள்ளை தொடர்பாக மு.க. அழகிரியின் அமெரிக்க மருமகன் விவேக்குக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
தமிழகத்தை உலுக்கிய கிரானைட் கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருக்கிறார் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரைதயாநிதி. அவரது இருப்பிடம் மற்றும் சொத்துக் குவிப்புகள் தொடர்பாக நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் மதுரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
துரைதயாநிதியின் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து இந்த விசாரணை தீவிரமடைந்தது. அழகிரியின் மகள் கயல்விழியின் கணவர் வெங்கடேஷை மதுரைக்கு வரவழைத்து பல மணி நேர விசாரணைக்குப் பிறகு விடுவித்தது போலீஸ்.
இதைத் தொடர்ந்து மற்றொரு மகள் அஞ்சுகச் செல்வியின் கணவர் விவேக்கிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர் அஞ்சுகச் செல்வியும் அவரது கணவர் விவேக்கும் அமெரிக்காவில் இருக்கின்றனர். துரை தயாநிதி விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அமெரிக்காவில் உள்ள விவேக்குக்கு மதுரை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். விவேக்கின் மதுரை டி.வி.எஸ்.நகர் வீட்டில் இந்த சம்மன் ஒட்டப்பட்டுள்ளது.
விவேக்கின் தந்தை ரத்தினவேலுவிடமும் போலீசார் ஏற்கெனவே விசாரணை நடத்தி உள்ளனர்.
இதனிடையே தம் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் துரைதயாநிதி மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார்.