ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு மீண்டும் தேர்வு-சமூக நீதிக்கு எதிரானது: கி.வீரமணி
சென்னை: ஆசிரியர் பயிற்சி பெற்று தேர்வானவர்களுக்கு மற்றொரு தேர்வு வைப்பது சமூக நீதிக்கு எதிரானது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் பல ஆண்டு காலம் ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்கள் மீண்டும் ஒரு தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே மீண்டும் பணிபுரிய வாய்ப்புள்ளவர்கள் என்பது போன்ற ஒரு நிலைமையை தமிழக அரசு உருவாக்கியது, மனிதநேய கண்ணோட்டத்தில் தவறான ஒன்றாகும்.
ஆசிரியர்கள் அறிவுத்திறனை நவீனமயப்படுத்தி கொள்ளுதல் அவசியம் என்பதை நான் மறுக்கவில்லை. அதற்கான பயிற்சிகளை ஆசிரியப் பணியில் நீடித்து கொண்டே பெறலாம். அதை விட்டுவிட்டு அவர்களை மற்றொரு ‘புதுவகை நுழைவுத் தேர்வை' எழுதி கூறி, தேர்வெனும் தடை ஓட்டப்பந்தயத்தில் கலந்து தாண்டி ஜெயித்துக் காட்டுங்கள் என்று கூறுவது விரும்பத்தக்கது அல்ல.
பணி அனுபவம் வாய்ந்தவர்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் தந்து, அதற்குள் அவர்கள் தங்கள் ஆற்றலை வளர்த்துக் கொண்டு, போட்டியிடலாம் என்று அரசு ஆணையிடலாம். அப்படி வருகின்றவர்கள் அதன் அடிப்படையில் பதவி உயர்வு, ஊக்க தொகை என்று வைத்தால், ஒரு சிலரை தவிர மற்றவர்கள் கடுமையாக உழைத்து முன்னேற முயற்சிப்பார்கள்.
இப்படிப்பட்ட பாதிப்புக்குள்ளாவோர் பெரிதும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, கிராமப்புறங்களில் இருந்து வந்து பணியில் சேர்ந்தவர்கள் என்ற போது இப்பிரச்சினை சமூக நீதிக் கண்ணோட்டத்தோடும், மனிதநேயத்துடன் கூடிய ஈரநெஞ்சத்துடனும் அணுக வேண்டிய ஒன்று என்பதை, தமிழக அரசுக்கு குறிப்பாக முதல்வருக்கு தெரிவித்து கொள்கிறேன்.
சத்துணவுப் பணியாளர்கள் நீக்கம் சத்துணவு கூடங்கள், அங்கன்வாடிகளுக்கு 29 ஆயிரம் ஊழியர்கள் முறைப்படி இடஒதுக்கீடு, உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களை புறந்தள்ளி, நியமனம் செய்யப்பட்டுள்ளதால் சென்னை உயர்நீதிமன்றம் அரசின் நியமன ஆணையை ரத்து செய்துவிட்டது.
உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள குறைபாடுகளை சரி செய்து உரிய முறையில் புதிதாக நியமனம் செய்வதே சரியானது ஆகும். மாறாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்று முதல்வரை கேட்டு கொள்கிறேன்.
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தால் அரசின் நிலை மிகவும் கேலிக்குரியதாக ஆகாதா என்பதையும் தமிழக அரசின் தலைமை சிந்திக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.