தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மத்திய அமைச்சருக்கும் சூடு, சொரணை இல்லை- வைகோ ஆவேசம்

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழகத்தின் பிரதான வாழ்வாதாரமான காவிரி நதிநீர் பாசன உரிமை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழகம் அனுபவித்து வரும் சட்டப்பூர்வமான உரிமை ஆகும்.
அனைத்து உலக நாடுகள் வகுத்துள்ள நெறிகளுக்கும், சட்ட விதிகளுக்கும் நேர் முரணாக, காவிரி நதி நீர்ப் பிரச்சினையிலும், முல்லைப் பெரியாறு, சிறுவாணி, கீழ்பவானி, அமராவதி, குமரி மாவட்ட நெய்யாறு இடதுகரை கால்வாய், நெல்லை மாவட்ட செண்பகவல்லி தடுப்பு அணை, தென்பெண்ணை ஆற்றின் நீர் உரிமை, பாலாற் றின் நீர்உரிமை அனைத்திலும் அண்டை மாநிலங்கள் நீதிக்கும், சட்டத்துக்கும் புறம்பாக தமிழகத்திற்கு கேடு செய்யும் போக்கை காங்கிரஸ் தலைமை தாங்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்திய அரசு ஊக்குவித்து தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்கிறது.
காவிரி தண்ணீர் தமிழகத்துக்கு சட்டப்பூர்வ உரிமையின்படியும், நடுவர் மன்ற தீர்ப்பின்படியும் பெறுவதற்கு தமிழக அரசு பிரதமரிடம் கோரிக்கை வைத்ததற்கு, ஒப்புக்காக வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு, கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று பிரதமர் அறிவித்தார்.
அதனை ஏற்க மறுத்த கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கையும் செய்தது. காவிரியில் உரிய தண்ணீர் வராததால் மிகக் கடுமையான துன்பத்திற்கு ஆளாகி உள்ள தமிழக மக்கள் எல்லையற்ற பொறுமையோடு அமைதி காத்து வருகின்றனர்.
ஆனால் தமிழர்களின் தன்மான உணர்ச்சியை சீண்டிப் பார்க்கும் கன்னடவெறி அமைப்புகளும், கர்நாடகத்தை சேர்ந்த அரசியல் கட்சியினரும் அநீதியான போராட்டங்களை நடத்தி, வம்பை விலைக்க வாங்க முயல்கின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சராக இருக்கின்ற கர்நாடகத்தை சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரக் கூடாது என்று ஆணவத்தோடு கன்னட வெறியராக மாறி, பிரதமருக்கு அமெரிக்காவில் இருந்து அவசர கடிதம் அனுப்பி உள்ளார்.
உடனடியாக இதற்கு கண்டனம் தெரிவித்து வெளிப்படையாக பிரதமருக்கு கடிதம் எழுதுகின்றமான உணர்ச்சியோ, தமிழக நலனில் அக்கரையோ மத்திய அமைச்சரவையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த ஒரு அமைச்சருக்கும் இல்லை. சூடும் சொரணையும் இல்லை என்பது வெட்கக்கேடானது என்று கூறியுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications