அருணாச்சலில் ஒரு 'சகாயம்'.. ரூ.1,000 கோடி ஊழலை அம்பலப்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி திடீர் மாயம்!
இடாநகர்: ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்தி சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே மாதிரியன கதிதான் ஏற்படும் என்பதையே அருணாசலப்பிரதேசத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் காணாமல் போன சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் கலகக் குரல்
தமிழகத்தில் முன்னர் உமாசங்கர், தற்போது சகாயம், விருதுநகர் ஆட்சியர் பாலாஜி போன்றோர் நேர்மையாக செயல்பட்ட அதிகாரிகள். இவர்கள் சந்தித்து எல்லாம் காத்திருப்பு பட்டியல், பணி இடமாற்றம் என்பதுதான்.
இதே நிலைமைதான் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ராவின் ஊழலை அம்பலப்படுத்திய ஹரியான ஐ.பி.எஸ். அதிகாரி அசோக் கெம்காவுக்கும் நேர்ந்தது. தற்போது அருணாசலப் பிரதேசத்திலும் இப்படி செயல்பட்ட ஒரு அதிகாரியின் கதி என்னவென்றே தெரியவில்லை...
அருணாசல் ஐ.பி.எஸ். அதிகாரி எங்கே?
அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி மயாங் செளகான். அருணாசலப் பிரதேச மாநிலத்தின் பொதுவிநியோகத் திட்டத்தில் ரூ1000 கோடி அளவுக்கு மோசடி நடந்த புகாரை அம்பலப்படுத்திய கையோடு, காங்கிரஸ் அமைச்சர்கள். எம்.எல்.ஏக்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யக் காரணமாக இருந்தார். இந்த வழக்கில் மொத்தம் 56 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதில் கடுப்படைந்த அருணாச்சலப்பிரதேச அரசாங்கம் அவரை இடமாற்றம் செய்ய திட்டமிட்டது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் திடீரென அவர் காணாமல் போயுள்ளார். அவரது கதி என்ன ஆயிற்று? எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை என்றே கூறப்படுகிறது. குற்றச்சாட்டுக்குள்ளானோர்தான் அவரைக் கடத்தியிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.