ரயில்களில் பட்டாசு எடுத்து செல்ல தடை-கண்காணிக்க 15 தனிப்படைகள் அமைப்பு
சென்னை: ரயில்களில் பட்டாசு கொண்டு செல்ல கூடாது என்று ரயில்வே துறை ஏற்கனவே எச்சரித்துள்ளது. இதையும் மீறி கொண்டு செல்லும் நபர்களை கண்காணிக்க 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிக்கையை பட்டாசு வெடித்து கொண்டாடுவது பாரம்பரிய வழக்கமாக உள்ளது. இதனால் வெளியூர்களில் வேலை செய்பவர்கள், பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் போது பட்டாசு வாங்கி செல்கின்றனர்.
சிலர் ரயில்களிலும், பஸ்களிலும் பட்டாசுகளை கொண்டு செல்கின்றனர். இதனால் எதிர்பாராத வகையில் அவை வெடித்து அசம்பாவிதங்கள் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில் ரயில்கள் மற்றும் பஸ்களில் வெடிக்கும் மற்றும் எரியும் தன்மை கொண்ட பொருட்களை கொண்ட செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதிலும் ரயில்களில் வெடிக்கும் மற்றும் எரியும் தன்மை கொண்ட பொருட்களை கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டால், சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், ரயில்களில் சிலர் மறைமுகமாக பட்டாசுகளை எடுத்து செல்ல வாய்ப்புள்ளது. எனவே இதை கண்காணிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் 15 தனிப்படை போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தனிப்படை போலீசார் சீருடையிலோ, மாறுவேடத்திலோ பணியில் ஈடுபடுபவர். ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் தனிப்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். ரயில்களில் விதிமுறை மீறி பட்டாசு, பெட்ரோல், மண்ணெண்ணை போன்ற பொருட்கள் கொண்டு செல்லும் நபர்கள் பிடிப்பட்டால், சிறைத்தண்டனையும், அபாராதமும் விதிக்கப்படும் என்று ரயில்வே போலீசார் எச்சரித்து உள்ளனர்.
இது குறித்து ரயில் பயணிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் ரயில்வே ஏ.டி.ஜி.பி. சேகர் உத்தரவின்பேரில், ரயில்வே போலீசார் ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும் ரயில் பயணிகளின் அவசர உதவிக்கு 9962500500 என்ற இலவச செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.