நித்யானந்தா என் நிலத்தை ஆட்டையப்போட்டுட்டார்: சேலம் எஸ்.பி.யிடம் விவசாயி புகார்
சேலம் மாவட்டம் சீரகாப்பாடியைச் சேர்ந்தவர் விவசாயி குணசேகரன். அவர் சேலம் மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோட்னீசை சந்தித்து நித்யானந்தா மீது நில அபகரிப்பு புகார் மனு ஒன்றை அளி்த்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
கடந்த 2005ம் ஆண்டு சென்னை கிருஷ்ணன், சக்தி, செல்வம் ஆகியோர் மூலம் நித்யானந்தாவிடம் நான் அறிமுகமானேன். அவரது செயலாளர் சதானந்தா உள்ளிட்ட பலர் என்னிடம் சீரகாப்பாடி பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் அமைக்க விரும்புவதாகவும், கடத்தூர் முக்கோணம் பாளையம் பகுதியில் உள்ள எனது நிலத்தை தானமாக கொடுக்கும்படியும் கேட்டனர். நித்யானந்தாவும் இதுபற்றி என்னிடம் டெலிபோனில் பேசினார்.
எனவே 50 சென்ட் நிலத்தை தானமாக கொடுக்க ஒப்புக் கொண்டேன். கடந்த 2006ம் ஆண்டு பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்ற என்னிடமும் எனது மனைவி, சகோதரி ஆகியோரிடமும் அவர்கள் ஆங்கிலத்தில் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். ஆனால் நிலத்துக்கான பணம் குறித்து அவர்கள் பேசவில்லை.
2010ம் அண்டு அக்டோபர் 12ம் தேதி நித்யானந்தாவுக்கு கொடுத்த நிலத்தின் அருகில் இருந்த எனது நிலத்தை விற்க முயன்றபோது நித்யானந்தாவின் ஆதரவாளர்கள் என்னைத் தடுத்து நிலம் முழுவதும் தங்களுடையது எனக் கூறி பத்திரத்தை காட்டினர். அப்போது தான் நான் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன்.
நித்யானந்தா மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்னை மிரட்டியதால் போலீசில் புகார் அளிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 23ம் தேதி என்னை தொடர்பு கொண்ட சிலர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்க வேண்டாம் எனவும், நிலத்தையோ, அதற்கான பணத்தையோ கொடுத்து விடுவதாகவும், இதை நித்யானந்தா சொல்லச் சொன்னதாகவும் கூறினர். ஆனால் அவர்கள் கூறியபடி பணம் தரவில்லை. எனவே எனது நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.