நம்பிக்கையில்லா தீர்மானம்.... இது மம்தா பானர்ஜியின் மீதும் தான்!
இந்த விவகாரம் தொடர்பாக ஃபேஸ்புக்கில் மமதா பதிவு செய்திருக்கும் கருத்து:
நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று நாங்கள் ஏற்கெனவே வாக்குறுதி அளித்தபடி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தோம்.
மக்களவையில் இந்த தீர்மானத்தை கொண்டுவர முடிவு செய்த போது எங்களது பலம் தெரிந்தே தீர்மானித்தோம். அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் கட்சிகள் இந்த தீர்மானத்தை ஆதரிப்பர் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் அப்படி நடைபெறவில்லை.
நாடாளுமன்ற மக்களவையில் வேண்டுமானால் இந்தத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் மக்கள் மன்றத்தில் இந்த தீர்மானம் நிராகரிக்கப்படவில்லை. மேலும் மத்திய அரசை தாங்கிப் பிடிக்கும் அரசியல் கட்சிகளின் உண்மை முகம் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது என்று மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
ஆனால், மத்திய அரசின் மீது எதிர்க் கட்சிகளுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ மம்தாவை நம்பி கோதாவில் இறங்க யாரும் தயாராக இல்லை என்பதே உண்மை. நாளுக்கு ஒரு நிலையை எடுக்கும் அவரை நம்பி நடுரோட்டில் நிற்க எதிர்க் கட்சிகள் தயாராக இல்லை என்பதால் தான், அவருடன் கைகோர்க்க பிற கட்சிகள் தயங்குகின்றன.