சிதம்பர சிவஞான சுவாமிகள் மடத்தை சீரமைக்க தமிழக அரசு ரூ. 50 லட்சம் நிதி உதவி
சென்னை: திருப்போரூரில் உள்ள சிதம்பர சிவஞான சுவாமிகள் மடத்தை சீரமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ. 50 லட்சம் வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் புகழ் பெற்ற கோவில் திருப்போரூர் அருள்மிகு கந்தசுவாமி முருகன் திருக்கோயில். இந்த கோயிலை அமைத்தவர் சிதம்பர சிவஞான சுவாமிகள். இவர் வசித்து வந்த இடம் சிதம்பர சிவஞான சுவாமிகள் மடமாக பராமரிக்கப்பட்டு வருகின்றது.
கடந்த பல ஆண்டுகளாக இம்மடம் சிதிலமடைந்து விரிசல்கள் விட்டு கட்டிடம் பாழ்பட்டு கிடந்தது. இதனால் மடத்தை சீரமைக்க இந்து அறநிலையத்துறையிடம் கோயில் சார்பாக கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா கோயில்களை பராமரிக்கும் வகையில் இந்து அறநிலையத்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்து பழனி, திருப்போரூர் உள்ளிட்ட பல கோயில்களில் பராமரிப்பு பணிகள் செய்ய உத்தரவிட்டார்.
அந்த நிதியில் திருப்போரூர் சிதம்பர சிவஞான சுவாமிகள் மடத்தை சீரமைக்க ரூபாய் 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து சிதம்பர சிவஞான சுவாமிகள் மடத்தை சீரமைக்கும் பணி துவங்கியது.