காலம் தவறிய எந்த செயலும் உருப்படாது என்பதற்கு உதாரணம் ஜெ-ஷெட்டர் பேச்சுவார்த்தை: விஜயகாந்த்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் முதலமைச்சர்கள் காவிரி பிரச்சினை சம்பந்தமாக பெங்களூரில் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது அதிர்ச்சியும், ஏமாற்றமும் தரத்தக்கதாகும். காலம் தவறி செய்யப்படுகின்ற எந்த ஒரு செயலாலும் யாருக்கும் எவ்வித பயனும் இல்லை என்பதற்கு இந்த பேச்சுவார்த்தை ஒரு உதாரணமாகும். மனிதாபிமான அடிப்படையில் கூட இப்பிரச்சினையை பார்க்காத கர்நாடக அரசின் போக்கு கண்டிக்கத் தக்கதாகும்.
உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையின் பெயரில் இந்த முதல் அமைச்சர்களின் சந்திப்பு நடந்துள்ளது. நிலைமையை நேரில் எடுத்து விளக்கியும் கர்நாடக அரசு பிடிவாதமாக தண்ணீர் தர மறுத்து இருப்பது கடுமையான ஆட்சேபனைக்கு உரியதாகும். இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினை என்பதாலும், தமிழக விவசாயிகள் பெருமளவுக்கு பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாலும் இந்திய அரசு இதில் உடனடியாக தலையிட்டு தமிழ்நாட்டிற்கு நீதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications