தாம்பரம் அருகே ஆள்மாறாட்டத்தில் வெடிகுண்டு வீசி டிரைவர் கொலை: 2 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூர்: தாம்பரம் அருகே சேத்துப்பட்டு ஊராட்சிமன்றத்தலைவரை கொலை செய்வதற்காக வீசப்பட்ட வெடிகுண்டில் கார்டிரைவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தாம்பரம் அருகே சோமமங்கலத்தை அடுத்த சேத்துப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சங்கர். தி.மு.க.வைச் சேர்ந்த இவர் கல்குவாரி நடத்தி வருகிறார். நேற்று இரவு அவரது தம்பி வாசுதேவன், மாவட்ட கனிமவள உதவி இயக்குனர் சிவக்குமார், அவருடைய உதவியாளர் சிவலிங்கம் ஆகியோர் பல்லாவரத்திற்கு காரில் சென்றனர்.
மலைப்பட்டு அருகே வந்தபோது இருளில் மறைந்திருந்த மர்ம கும்பல் திடீரென காரை வழிமறித்து நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். குண்டுகள் வெடித்து சிதறி கார் தீப்பற்றி எரிந்தது. இதில் காரில் இருந்த 4 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். காயம் அடைந்த 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு தாம்பரம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் டிரைவர் கார்த்திகேயன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிவக்குமார், சிவலிங்கம் ஆகியோரின் நிலை மோசமாக உள்ளது.
கார்மீது வெடிகுண்டுகளை வீசிய போது ஆட்கள் வந்ததால் கொலையாளிகள் தங்கள் திட்டத்தை பாதியில் கைவிட்டு அருகே நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர். இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த தங்கராஜ், ரஞ்சித்தை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
ஊராட்சித்தலைவரை கொள்ள சதி
ஊராட்சி தலைவர் சங்கர் காரில் இருப்பார் என்று கருதி அவரை தீர்த்து கட்ட கொலையாளிகள் வெடிகுண்டுகளை வீசி உள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த முறை அவரும், அதற்கு முன் அவரது தாயாரும் ஊராட்சி தலைவராக இருந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் தொடர்ந்து ஊராட்சி தலைவர் பதவி வகித்ததால் அவருக்கு எதிர்ப்புகள் அதிகளவில் இருந்தது. அவர் கடந்த உள்ளாட்சி தேர்தலில் பலரது எதிர்ப் பையும் மீறி வெற்றி பெற்றார். எனவே சங்கரை தீர்த்து கட்ட எதிர்கோஷ்டியினர் கூலிப்படையை ஏவி விட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
சங்கருக்கும், ஊராட்சி தலைவர் தேர்தலில் எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தனுக்கும் இடையே நிலப்பிரச்சினையும் இருந்து வந்துள்ளது. தற்போது ஆனந்தன் தலைமறைவாக உள்ளார். அவர் உள்பட 6 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
பெட்ரோல் வெடிகுண்டுகள்
கடந்த அக்டோபர் 1-ந்தேதி சினிமா பட அதிபரும் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான பி.பி.ஜி. குமரனை மதுரையைச் சேர்ந்த கூலிப்படையினர் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடிக்கடி கொலை சம்பவங்கள் அரங்கேறுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.