15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்
சென்னை: 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் இன்று ஒன்று நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எம்.துரைபாண்டியன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நாடு முழுவதும் உள்ள 12.5 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். இதில் தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். மத்திய அரசு ஊழிர்களுக்கு 7வது சம்பள கமிஷனை உடனே அமைத்திட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை வாபஸ் பெற வேண்டும். 50 சதவீத பஞ்சப்படியை ஊதியத்துடன் சேர்த்து ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து பலன்களையும் வழங்கிட வேண்டும்.
கிராமங்களில் உள்ள அஞ்சலகங்களிஸ் பணியாற்றும் 2,75,000 ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து பலன்களையும் அளித்திட வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள 6 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான வேலையை எந்தவித நிபந்தனையும் இன்ற வழங்கிட வேண்டும். அரசு வேலையை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துகிறோம்.
இந்த போராட்டத்தில் கணக்கு தணிக்கை (ஏ.ஜி. அலுவலகம்), வருமானவரி, தபால் துறை, கல்பாக்கம் அணு மின் நிலையம், கிண்டி வளாகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், ராஜாஜி பவன், சாஸ்திரி பவன் உள்ளிட்ட 45க்கும் மேற்பட்ட மத்திய அரசு அலுவலக ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த போராட்டத்திற்கு பிறகும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் பிப்ரவரி மாதம் டெல்லியில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவிப்போம் என்றார்.