காவிரி நதிநீர் விவகாரம்: கர்நாடகாவில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்
காவிரியில் 12 டி.எம்.சி. நீரை தமிழகத்துக்குத் திறந்துவிட காவிரி கண்காணிப்புக் குழு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை செயல்படுத்த உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டிருக்கிறது. மேலும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடப் போவதாகவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் இன்று முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரின் இல்லத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் மாலை 3 மணியளவில் நடைபெற இருக்கிறது.
இக் கூட்டத்தில் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, சட்டத் துறை அமைச்சர் சுரேஷ்குமார், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, மேலவை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.ஆர்.பாட்டீல், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எச்.டி.ரேவண்ணா, எம்.சி.நானையா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இன்றைய கூட்டத்தில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது குறித்தும் தமிழகத்துக்கு நீர் திறக்க உத்தரவிட்டிருக்கும் கண்காணிப்புக் குழுவின் உத்தரவு குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.