மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு: கவலையில் காவிரி டெல்டா விவசாயிகள்
நடப்பாண்டு பருவமழை பொய்த்து விட்டதால் தமிழக அணைகள் வறண்டு வருகின்றன. காவிரி டெல்டா மாவட்டங்களின் ஜீவநாடியாக திகழும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து காவிரியில் திறந்து விட்ட நீரை கடந்த ஞாயிறு மாலையோடு நிறுத்தப்பட்டுவிட்டதால் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்துவிட்டது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 1700 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கு விநாடிக்கு 11,500 கனஅடி வீதம் நீர் திறக்கப்படுகிறது. நீர் வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் நீர் மட்டம் அதிரடியாக குறைந்து வருகிறது. இன்று காலை நீர் மட்டம் 44.55 அடியாகவும், நீர் இருப்பு 14.55 டிஎம்சியாகவும் உள்ளது. நீர் மட்டம் குறைந்துள்ளதால் சுரங்கம் மின்நிலையம் வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சுரங்க மின்நிலையத்தில் மின்உற்பத்தி செய்யப்படவில்லை.
தற்போது டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி அறுவடையை நெருங்கி வரும் நிலையில், இன்னும் 50 நாட்களுக்கு மேல் அங்கு தண்ணீர் தேவைப்படும். ஆனால் அணையில் இருந்து இன்னும் 6 நாட்களுக்கு தான் பாசனத்திற்கு நீர் திறக்கமுடியும் என்பதால், பயிர்களை காக்கமுடியுமா? என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர் உள்ளனர்.