மோடி 3-வது முறை முதல்வாராவா?: குஜராத்தில் களை கட்டும் சூதாட்டம்!
குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 தொகுதிகள் இருக்கின்றன. இதில் 87 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த 13-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 95 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
மணிநகர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் நரேந்திர மோடியை எதிர்த்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் மனைவி ஸ்வேதாபட் நிறுத்தப்பட்டிருக்கிறார். நாளை வாக்குப் பதிவுக்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையும் துணை ராணுவப் படையும் நிறுத்தப்பட்டிருக்கிறது.
இரு கட்ட வாக்குகளும் வரும் 20-ந் தேதி எண்ணப்படுகின்றன.
பாஜகவைப் பொறுத்தவரையில் குஜராத் மாநிலத்தின் முதல்வராக 3-வது முறையாக மீண்டும் நரேந்திர மோடி ஆட்சியைப் பிடிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் பாஜகவிலிருந்து விலகி தனிக் கட்சி தொடங்கியிருப்பதால் பாஜகவின் வாக்குகள் பிரியும் என்று கணக்குப் போட்டியிருக்கிறது. இது தங்களுக்கு வெற்றியைக் கொடுக்கும் என்று கருதுகிறது காங்கிரஸ்.
கட்சிகளின் கணிப்புகள் ஒருபக்கம் இருக்க, நிழல் உலக சூதாட்டக் கும்பலும் நரேந்திர மோடி 3-வது முறையாக ஆட்சியை பிடிப்பாரா? இல்லையா? என்று பந்தயம் கட்டி ஆடி வருகிறது. ஒன்றிரண்டு தொகுதிகளே வெல்லக் கூடும் என்று கருதப்படுகிற கேசுபாய் பட்டேல் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பதை வைத்தும் சூதாட்டம் களை கட்டியிருக்கிறதாம்!