வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம்
டெல்லி: வங்கித் துறையில் அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் சட்டத் திருத்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
வங்கிகள் முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடுவது,போட்டியைக் கண்காணிக்கும் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வங்கித்துறைக்கு விலக்கு அளிப்பது உள்ளிட்ட இரு பிரிவுகளும் இந்த மசோதாவில் இடம்பெற்றிருந்தன.
ஆனால்,எதிர்கட்சிகளின் எதிர்ப்பையடுத்து,இந்த இரு பிரிவுகளையும் நீக்குவதற்கு அரசு ஒப்புக் கொண்டது. எனினும், இடதுசாரிகள் முன்வைத்த வேறு சில திருத்தங்களை அரசு நிராகரித்தது.
இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ‘வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதா' என்ற இந்த மசோதா,புதிய தனியார் வங்கிகளை நிறுவுவதற்கும் வகை செய்கிறது.
சர்ச்சைக்குரிய மற்றொரு மசோதாவான,நிலம் கையகப்படுத்துவது தொடர்பான மசோதா,வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அவையின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.