மம்தா ஜீ... டென்சன் ஆகாதீங்க... கொல்கத்தா ஹைகோர்ட்
கடந்த ஆகஸ்டு 14-ந் தேதி மேற்கு வங்க சட்டசபை விழாவில் பங்கேற்று பேசிய மம்தா பானர்ஜி, நீதித்துறை மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினார். பணத்துக்காக, நீதிபதிகள் தீர்ப்பு அளிப்பதாக மம்தா பானர்ஜி கூறியதற்காக, அவர் மீது தானாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு மூத்த வக்கீல்கள் விகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா, சுப்ரதா முகர்ஜி ஆகியோர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
மம்தாவின் பேச்சு அடங்கிய வீடியோ படத்தையும் தாக்கல் செய்தனர். ஆனால் அந்த வழக்கை விசாரித்த பெஞ்சின் தலைவரான நீதிபதி சென்குப்தா, உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இதனால், தலைமை நீதிபதி அருண்குமார் மிஸ்ரா, ஜோய்மல்யா பக்சி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இவ்வழக்கை புதிதாக விசாரித்தது. அப்போது வாதாடிய வழக்கறிஞர் விகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா, விமர்சனத்துக்கான ‘லட்சுமணரேகையை' மம்தா தாண்டிவிட்டார் என்று குற்றம் சாட்டினார்.
நீதிமன்றத்தை விமர்சித்த அமைச்சர் பேகாரம் மன்னா மீது நடவடிக்கை எடுத்தது போல மம்தா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். அதைத் தொடர்ந்து மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், செவ்வாய்கிழமையன்று இவ்வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். அமைச்சர் பேகாரம் மன்னா, ஒரு குறிப்பிட்ட உத்தரவு பற்றி விமர்சித்தார். அதனால் அவர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், மம்தா பானர்ஜி எந்த குறிப்பிட்ட உத்தரவு பற்றியோ, நீதிமன்றம் பற்றியோ விமர்சிக்கவில்லை. ஆகவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்று கூறிய நீதிபதிகள், அம்மனுவை தள்ளுபடி செய்தனர்.
நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை எடுக்காததால், மம்தாவின் செயலை நாங்கள் அங்கீகரித்ததாக கருதக்கூடாது. பேசியவர், இந்த மாநிலத்தின் முதல்வர், அவரது பேச்சில் சாந்தம் கலந்திருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.