டெல்லியில் ஓடும் பஸ்ஸில் கற்பழிப்பு வழக்கு: கைதான பஸ் டிரைவர் பற்றி திடுக்கிடும் தகவல்கள்
டெல்லியில்
ஓடும் பேருந்தில் இளம்பெண்ணை கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேருந்து ஓட்டுநர் ராம் சிங் விசாரணையில் தனது தவறை ஒப்புக் கொண்டுள்ளார். ராம் சிங்கை அவரது நண்பர்கள் பைத்தியம் என்று தான் அழைப்பார்களாம். அந்த அளவுக்கு அவரின் நடவடிக்கைகள் இருக்குமாம்.
ராம் சிங் விசாரணையில் கூறுகையில்,
அந்த பெண் என் கையைக் கடித்ததால் குடிபோதையில் இருந்த நான் அந்த பெண்ணையும், அவரது ஆண் நண்பரையும் இரும்புக் கம்பியால் தாக்கினேன். என்னைப் பார்த்து பிறரும் அவர்களைத் தாக்கினர் என்றார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராம் சிங்கின் மனைவி இறந்துவிட்டார். அதில் இருந்து அவர் எதற்கெடுத்தாலும் யாருடனாவது சண்டைக்கு போவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் ஒரு விபத்து வழக்கில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு பிரச்சனைகளில் அவர் சிக்கியுள்ளார். மேலும் ஒரு பெண்ணுடன் வீட்டைவிட்டு ஓடியுள்ளார் என்று கூறப்படுகிறது.
ராம் சிங் குறித்து விசாரணைக் குழு தலைவர் இன்ஸ்பெக்டர் அனில் சர்மா கூறுகையில்,
அவர் முதலில் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்தார். பின்னர் மெதுவாக சொல்லத் தொடங்கினார். அந்த சம்பவத்தை கொஞ்சமும் வருத்தப்படாமல் தெரிவித்தார். சம்பவத்திற்கு பிறகு பேருந்தை கழுவிவிட்டு தன்னுடன் இருந்தவர்களை சில நாட்கள் தலைமறைவாக இருக்குமாறு கூறியுள்ளார். சிறிதும் பயமின்றி பேருந்தை நொய்டாவில் உள்ள உரிமையாளரிடம் கொண்டு சென்றுள்ளார். அவருக்கு ஈவு, இரக்கமே இல்லை என்றார்.
தடையங்களை அழிக்கவே அந்த கும்பல் அந்த பெண் மற்றும் அவரது ஆண் நண்பரின் ஆடைகளை அவிழ்த்துவிட்டு அவர்களை கீழே தள்ளிவிட்டுள்ளது. மேலும் அந்த பெண்ணின் செல்போனை எடுத்து வைத்துக் கொண்டு அதை சுவிட்ச் ஆப் செய்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.