கேரளாவுக்குக் கடத்தப்பட்ட இலவச கர்ப்பிணி பசுக்கள்... பிராணிகள் நலச் சங்கத்தினர் மீட்டனர்
சென்னை: தமிழகம் வழியாக கேரளாவிற்கு கடத்தப்பட்ட கர்ப்பிணி பசுக்களை விலங்குகள் நலச்சங்கத்தினர் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர். அவை காஞ்சிபுரம் கோசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
தமிழகத்தின் இலவசமாடுகள் அடிமாடுகளாக அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுகின்றன. இதனை தடுக்க பிராணிகள் நலச்சங்கத்தினர் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் மதுரவாயல் முதல் செங்கல்பட்டு டோல்கேட் வரையில் வாகனங்களைக் கண்காணிப்பதில் ஈடுபட்டனர். இரவு 11.30 மணியளவில் 29 காளை மாடுகளை ஏற்றிவந்த ஒரு டிரக்கை செங்கல்பட்டு டோல்கேட் அருகே மடக்கிப் பிடித்தனர். அந்த டிரக்கை ஓட்டி வந்த ஓட்டுனரிடமும் அவருடன் இருந்த உதவியாளர்களிடமும் எந்தவிதமான ஆவணங்களும் இல்லை.
அதேபோல் தென் தமிழகத்திலிருந்து ஆந்திராவிற்கு 16 பசுக்களை ஏற்றிக் கொண்டு வந்த ஒரு லாரியையும் இந்தக் குழுவினர் மடக்கிப் பிடித்தனர். 16 பசுக்களில் 6 பசுக்கள் கர்ப்பிணிப் பசுக்கள். அவை தமிழக அரசின் இலவசத் திட்டத்தில் விநியோகம் செய்யப்பட்ட பசுக்கள் ஆகும்.
இரண்டு லாரிகளையும் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறை ஆய்வாளரிடம் புகார் கொடுத்துள்ளனர். மிகவும் முடியாத நிலையில் இருந்த இரண்டு பசுக்களை பிளூ கிராஸ் நிறுவனத்தினர் கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்றனர். அதில் ஒரு பசு கன்றை ஈன்றுள்ளது. பின்னர் மற்ற பசுக்களை பெருமாள் கோவில் கோசாலைக்கு அனுப்பிவைத்தனர். முதல் டிரக்கில் இருந்த 29 நாட்டுக் காளை மாடுகளும் அருகில் உள்ள ஜெயின் சமூகத்தினரின் கோசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சென்னையைச் சேர்ந்த ஆலய வழிபடுவோர் சங்கம் கடந்த அக்டோபர் மாதம் "கடைசிப் பயணம்: கேரளத்திற்குக் கடத்தப்படும் கால்நடைகள்" என்கிற ஆவணப்படத்தை வெளியிட்டார்கள். அந்த ஆவணப்படத்தைப் பார்த்த பல பிராணிகள் நலன் விரும்பிகளும் ஆர்வலர்களும் இந்தக் கடத்தலைப் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்த வேண்டுமென்றும், கடத்தலைத் தடுப்பதற்கான வழிமுறைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் சமூக வலைத்தளங்களில் தொடர்பு கொண்டு இந்த கடத்தலை தடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.