'கற்பழிப்பு' எம்.பி, எம்எல்ஏக்களை பதவி நீக்க செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு-நாளை விசாரணை!
இதில் மனுதாரருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் இந்த எம்பிக்களும் எம்எல்ஏக்களும் பதவி இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 1976ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான புரோமிளா சங்கர் தான் இந்த பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதலில் பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள், வழக்குகளில் தொடர்புடைய மக்கள் பிரதிநிதிகளான எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக கற்பழிப்பு, கொலைகளில் தொடர்புடைய, குற்றப்பத்திக்கை தாக்கல் செய்யப்பட்ட எம்பி, எம்எல்ஏக்களை நீக்க வேண்டும்.
பஸ்களில் பெண்களுக்கு தொலை தரப்பட்டதாக தெரியவந்தால் உடனடியாக அந்த பஸ்சின் டிரைவர் அந்தப் பேருந்தை காவல் நிலையத்துக்கு ஓட்டிச் செல்ல வேண்டும். இதைச் செய்ய மறுத்தால் அந்த பஸ்சின் பர்மிட்டை ரத்து செய்ய வேண்டும், பஸ் டிரைவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
ரயில் நிலையங்கள், பஸ்கள், பஸ் நிலையங்கள், ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், பீச்கள், பார்க்குகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் சாதாரண உடையில் பெண் போலீசாரை நிறுத்த வேண்டும்.
இந்த இடங்களில் சிசிடிவிக்களை பொறுத்த வேண்டும்.
அனைத்து மாநிலங்களில் 3 மாதத்துக்குள் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கான தொலைபேசி ஹெல்ப் லைனை அமைக்க வேண்டும்.
ஈவ் டீசிங்கைத் தடுக்க கலெக்டர்கள், எஸ்பிக்களுக்கு கடும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும்.
அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள், அரசியல் தலைவர்களுக்குத் தரப்பட்டுள்ள மிகப் பெரிய அளவிலான பாதுகாப்பை வாபஸ் பெற வேண்டும். அந்தப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் போலீசாரை பெண்களின் பாதுகாப்புக்கும், பொது மக்களின் பாதுகாப்புக்கும் பயன்படுத்த வேண்டும். ஒரு அரசியல் தலைவரை பாதுகாக்க சராசரியாக 3 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், 761 பேருக்கு ஒரு போலீஸ்காரர் தான் இந்த நாட்டில் உள்ளனர்.
நாடு முழுவதும் 5 லட்சம் போலீஸ் பதவிகள் காலியாக உள்ளன. இதில் அனுமதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கையில் 4ல் ஒரு பங்காகும். எனவே, முதலில் கூடுதல் போலீசாரை நியமிக்க மாநிலங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார் புரோமிளா.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட புரோமிளா:
உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி முதல்வராக இருந்தபோது அவரை விமர்சித்துப் பேசியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் புரோமிளா என்பது குறிப்பிடத்தக்கது.
உடனே விசாரிக்க பார் கவுன்சில் கோரிக்கை:
இந்த மனுவை அவசரம் கருதி உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரான பரீனா ஸ்வரூப் கோரிக்கை விடுத்ததோடு, தலைமை நீதிபதி அல்தமஸ் கபீருக்கு கடிதமும் எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தில், டெல்லியில் நடந்த சம்பவம் ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடி இனப் பெண்கள் கடத்தப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவது பெருமளவில் நடந்து வருகிறது. நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவிட்டன. இதனால் இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன் நாளை நடைபெற உள்ளது.