எனக்குப் பின் ஸ்டாலின்: கருணாநிதிக்கு மு.க. அழகிரி எதிர்ப்பு! ஆதரவாளர்கள் கொந்தளிப்பு!
சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கருணாநிதி, தமக்கு அடுத்து தி.மு.க தலைவர் ஸ்டாலின்தான் என்பதை கோடிட்டுக் காட்டிப் பேசினார். கருணாநிதியின் இந்த பேச்சுக்கு மு.க.அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மு.க. அழகிரி, வாரிசுகளை தலைவராக நியமிக்கக் கூடிய மடம் திமுக அல்ல என்று ஏற்கெனவே கருணாநிதி கூறியிருக்கிறார் என சுட்டிக் காட்டினார். மேலும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் மதுரையிலிருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்திருக்கிறார் அழகிரி. இன்று கருணாநிதியை சந்தித்து அவர் பேச இருக்கிறார்.
மு.க.ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என்ற கருணாநிதியின் அறிவிப்பு மதுரை மாவட்ட அழகிரி ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. "எங்கள் அண்ணனுக்கு உரிய மரியாதையை கொடுத்துவிட்டு எந்த முடிவையும் கட்சித் தலைமை எடுக்கட்டும்" என்று அவர்கள் கூறியுள்ளனர்.
மு.க.அழகிரி ஆதரவாளரான முன்னாள் துணைமேயர் மன்னன் கூறுகையில், தலைவர் கலைஞர் எடுக்கும் முடிவு கட்சியின் நலன் கருதிதான் எப்போதும் அமைந்திருக்கும். அவர் கட்சி தொண்டர்களின் நலனுக்காகவும், கட்சி வளர்ச்சிக்காகவும் பாடுபட்டு வருபவர். அவர் எடுக்கும் இறுதி முடிவை அனைவரும் ஏற்று கொள்வோம் என்று தெரிவித்தார்.
மதுரை நகர் மாவட்ட அவைத்தலைவர் இசக்கி முத்து கூறுகையில், தி.மு.க.வின் தென் மண்டல அமைப்பு செயலாளராகவும், மத்திய அமைச்சராகவும் மு.க.அழகிரி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தொண்டர்களை அரவணைத்து செல்வதிலும், தலைமை பண்பிலும் சிறந்து விளங்குகிறார். எனவே தொண்டர்களும் மு.க.அழகிரியை விரும்புகிறார்கள். அடுத்த தலைவர் யார்? என்பதை தொண்டர்கள் தீர்மானிக்க வேண்டும். அதுதான் கட்சிக்கு பயனுள்ளதாக அமையும் என்றார்.
அதே நேரத்தில் தி.மு.க.வின் தலைவர் பதவிக்கு மு.க.அழகிரி போட்டியிட வேண்டும். அதுதான் அனைத்து தி.மு.க. தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது. அதனை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்பதுதான் அழகிரி ஆதரவாளர்களின் பொது கருத்தாக இருக்கிறது.