சட்டசபை தேர்தல்: திரிபுராவில் பிப். 14; மேகாலயா,நாகலாந்தில் பிப். 23-ல் வாக்குப் பதிவு
டெல்லி: வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் மார்ச் மாதத்துடன் சட்டசபைகளின் பதவிக் காலம் முடிவடைகிறது. இதனால் இம்மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே மூன்று மாநிலங்களிலும் தேர்தல் களைகட்டி விட்டது. 3 மாநிலங்களிலும் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் இறக்கிவிட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையாளர் தேர்தல் தேதியை அறிவித்தார். திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 14-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். மேகாலயா, நாகாலாந்தில் பிப்ரவரி 23-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். மூன்று மாநிலங்களின் வாக்குகளும் பிப்ரவரி 28-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் இன்று முதல் அம்மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.