சிறுமியிடம் சில்மிஷம்: காவல் நிலையத்தில் ஓடி விளையாடிய முதியவர்
திருச்செந்தூர்: கமுதியில் இருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரை வந்தபோது வழிதவறி சுற்றித் திரிந்தவர் சிறுமியிடம் சில்மிஷம் செய்த போது சிக்கினார். காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தியபோது ஓடிப் பிடித்து விளையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணம் கடற்கரையில் கடந்த 10 நாட்களுக்கு முன் சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அங்கு விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை கையைப் பிடித்து இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மர்ம ஆசாமியை பிடித்து திருச்செந்தூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்ததால் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் அதே நபர் வீரபாண்டியன்பட்டணம் குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்தார். இதனால் அந்த நபர் குழந்தையை கடத்தும் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என பெற்றோர் பீதியடைந்தனர். இதையடுத்து அப்பகுதி ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் மர்ம ஆசாமியை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் வாய் பேச முடியாதவர் போன்று சைகையால் பேசினார். பின்னர் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததைத் தொடர்ந்து தான் கமுதியைச் சேர்ந்தவர் என்றும் அங்கிருந்து திருச்செந்தூர் கோயிலுக்கு வந்தபோது உடன் வந்தவர்கள் தன்னை இங்கேயே விட்டு சென்றதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவர் மீண்டும் திருச்செந்தூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
காவல் நிலையத்திலும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல ஓடிப் பிடித்து விளையாடுவது, குடி தண்ணீர் பைப்பை திறந்து விடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு போலீசாருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினார். இதையடுத்து கமுதியில் உள்ள அவரது உறவினர்களை போலீசார் தொடர்பு கொண்டு விசாரித்தனர். இதில் அவர் திருச்செந்தூருக்கு வந்தபோது பாதயாத்திரையில் காணாமல் போனது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications