சென்னையில் தொடரும் மெட்ரோ ரயில் பணி மரணங்கள்..
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 2014-ம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதால் சுரங்கப்பணிகள், ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது. ஆனால் பணியின்போது கிரேன் விழுந்து, கீழே விழுந்து என தொழிலாளர்கள் அடுத்தடுத்துப் பலியாகி வருகின்றனர்.
கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. பரங்கிமலை ரயில் நிலையத்தின் அருகில் இருந்து கத்திப்பாரா வரை மெட்ரோ திட்டத்திற்காக ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன.ஒவ்வொரு தூண்களுக்கும் இடையே ரயில் பாதைக்காக பாலத்தை இணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர். இந்த பணியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் இரவு பாதை அமைக்கும் பணியில் 30 ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள், பரங்கிமலை சுரங்கப்பாதை அருகே உள்ள படவட்டம்மன் கோவில் அருகே 50 அடி உயரத்தில் 400 டன் எடையுள்ள லாஞ்சர் கருவி மூலம் தூண்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ராட்சத லாஞ்சர் கருவியை ஒரு தூணில் இருந்து மற்றொரு தூணுக்கு தள்ளியபோது அது திடீரென சரிந்தது. இதை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதற்குள் கருவி மீது இருந்த இரும்பு கிரேன்கள் சரிந்தன. இதையடுத்து அதில் இருந்த ஊழியர்கள் குதித்து தப்பினார்கள். அப்போது லாஞ்சர் கருவி 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து ராட்சத தூணில் மோதி நின்றது. அதில் ஏற்பட்ட இடிபாடுகளில் 4 ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர். அதில் பீகாரை சேர்ந்த டிம்பள் ஷா என்ற 24 வயது தொழிலாளரி பரிதாபமாக உயிரிழந்தார். சமீர்கான், நந்து பாஸ்வான், மும்தாஜ் அன்சாரி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
2 துண்டான உடல்
இடிபாடுகளில் சிக்கிய டிம்பிள் உடல் 2 துண்டாகி விட்டது. 3 மணி நேர போராட்டத்திற்கு சாக்கு மூட்டையில் உடலை கீழே இறக்கினார்கள். உடலை கீழே கொண்டு வந்ததும் ஊழியர்கள் பிணத்தை வைத்துக் கொண்டு தராமல் கோஷம் போட்டனர்.
இரவு நேர பணியின் போது மெட்ரோ அதிகாரிகள், திட்ட பணி அதிகாரிகள் யாரும் இருப்பதில்லை. இங்கு பணியில் இருந்த கிரேன் ஆப்ரேட்டர், திட்ட என்ஜினீயர் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். எங்களை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. எங்கள் உயிருக்கு உத்தரவாதம் தரவேண்டும். பலியான டிங்பிள் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத் தொகை உடனே வழங்க வேண்டும் என்று கோரி அவர்கள் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களை துணை கமிஷனர் சுதாகர் சமாதானப்படுத்தினார். உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். ஆனாலும் ஊழியர்கள் உடலைத் தர முடியாது என்று கூறியதால் கோபமடைந்த போலீஸார் தடியடி நடத்துவோம் என எச்சரித்தனர். அதன் பின்னர் தொழிலாளர்களை விலக்கி விட்டு போலீஸார் உடலைக் கைப்பற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் அங்கு வந்த மெட்ரோ ரயில் திட்டப் பணி அதிகாரிகளை போலீஸார் கடுமையாக கண்டித்தனர். பணி நடக்கும்போது ஏன் யாருமே இல்லை என்று அவர்களை கண்டித்தனர். மேலும் பணியின்போது அஜாக்கிரதையாக இருந்தது, விபத்து ஏற்படுத்திது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து திட்ட என்ஜீனியர்களான மருது பாண்டியன், சந்தீப் சிங், பாதுகாப்பு அதிகாரிகளான கேரளாவைச் சேர்ந்த பினீத், தூத்துக்குடி விமல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ரூ. 9 லட்சம் இழப்பீடு
இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த டிம்பிளின் குடும்பத்துக்கு ரூ. 9 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவரைப் பணியில் அமர்த்திய காண்டிராக்டரான எல் அன்ட் டி நிறுவனம் மூலம் இந்தத் தொகையை டிம்பிளின் மனைவியிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே இடத்தில் 2வது விபத்து
இதே இடத்தில் ஏற்கனவே ஒரு தொழிலாளர் சமீபத்தில் உயிரிழந்தார் என்பது நினைவிருக்கலாம். தற்போது அதே பகுதியில் மீண்டும் விபத்து நடந்துள்ளது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.