அரசிதழில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு- சோனியாவுடன் மன்மோகன்சிங் ஆலோசனை
டெல்லி: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனை நடத்தியுள்ளார்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு 2007-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால் அரசிதழில் இதுவரை வெளியிடப்படவில்லை. இத்தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று தமிழகம் வலியுறுத்தி வருகிறது. கடந்த மாத இறுதிக்குள் அரசிதழில் வெளியிடப்பட்டு விடும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால் கர்நாடகத்தின் நிர்பந்தத்தால் மத்திய அரசு வெளியிடாமல் இருந்து வருகிறது. இதற்கு உச்சநீதிமன்றம் அண்மையில் மத்திய அரசுக்கு குட்டும் வைத்திருந்தது.
இதனால் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது மத்திய அரசு. இந்நிலையில் டெல்லியில் நேற்று காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க காங்கிரஸ் மேலிடக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஹரிஷ் ராவத், நடுவர் மன்றத் தீர்ப்பை வெளியிட்டாக வேண்டிய நிலை இருப்பதை விவரித்தார். ஏனெனில் அரசிதழில் வெளியிட கர்நாடகா தரப்பு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
ஹரீஷ் ராவத்தின் கருத்து குறித்து சோனியாவுடன் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் விவாதித்துள்ளனர். இதனால் மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கூடும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications