கோவையில் முதல் மனைவிக்கு தெரியாமல் 2 பெண்களை மணந்த ஏட்டைய்யா சஸ்பெண்ட்
கோவை: கோவையில் முதல் மனைவிக்கு தெரியாமல் 2 பெண்களை திருமணம் செய்த ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் ஏட்டாக இருப்பவர் செந்தில் குமார்(45). கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி அவருக்கும், கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த முருகவள்ளிக்கும் திருமணம் நடந்தது. அதன் பிறகு அதே ஆண்டு போத்தனூரைச் சேர்ந்த லாலு என்ற பெண்ணை மணந்தார் செந்தில் குமார். 2 பெண்களை மணந்தது போதாது என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி கோவை டாடாபாத்தைச் சேர்ந்த பத்மினி என்பவரையும் மணந்தார்.
ஒருத்தரை மணந்தது இன்னொருத்தருக்கு தெரியாதவாறு பார்த்துக் கொண்டார். இந்நிலையில் அவர் 3 முறை திருமணம் செய்தது முதல் மனைவியான முருகவள்ளிக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர், முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே அவருக்கு தெரியாமல் வேறு 2 பெண்களை திருமணம் செய்த செந்தில் குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில் குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாநகர கமிஷனர் விஸ்வநாதனுக்கு உத்தரவிட்டார். அவர் இந்த விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு செல்வபுரம் போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசார் அளித்த அறிக்கையின் அடிப்படையில் செந்தில் குமாரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் உத்தரவிட்டார்.