கர்நாடகா: எதியூரப்பா எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து தப்ப முயலும் பாஜக அரசு!
கர்நாடகா மாநில ஆளும் பாஜகவுக்கு அவ்வப்போது கொத்து கொத்தாக எம்.எல்.ஏக்கள் அதிருப்தி தெரிவித்து ராஜினாமா செய்வது வழக்கம். அதனால் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி ஒரு நெருக்கடியான நிலைமை ஏற்படும் போது பதிலடியாக அதிருப்தி "எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம்" செய்து ஒட்டுமொத்த கணக்கில் இருந்து கழித்துவிட்டு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுவிடுவர்.
கடந்த 2010-ம் ஆண்டு எதியூரப்பாவுக்கு எதிராக இப்படித்தான் 11 பாஜக எம்.எல்.ஏக்களும் 5 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் போர்க்கொடி தூக்கி ராஜினாமா செய்தனர். இதற்காக மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி வரிந்து கட்டிக் கொண்டு அப்போது வேலை செய்து பார்த்தார். ஆனால் அப்போதைய முதல்வர் எதியூரப்பா தமது பதவியைக் காப்பாற்ற சபாநாயகர் போபையா உதவியுடன் 16 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கமே செய்துவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி வெற்றியும் பெற்றுவிட்டார்.
காலம் சுழன்று விசித்திர கோலத்தில் நிற்கிறது. தற்போது முதல்வராக உள்ள ஜெகதீஷ் ஷெட்டருக்கு எதிராக எதியூரப்பாவின் ஆதரவாளர்கள் 13 பேர் நாளை ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கொடுக்க இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் பரத்வாஜிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தனர். சபாநாயகர் தற்போது நாடு திரும்பியுள்ள நிலையில் நாளை அவர்களிடம் ராஜினாமா கடிதம் கொடுக்க இருக்கின்றனர்.
ஆனால் இப்போது ஜெகதீஷ் ஷெட்டரோ தமது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூலமாக ராஜினாமா செய்யக் கூடிய 12 அல்லது 13 எம்.எல்.ஏக்களையுமே தகுதி நீக்கம் செய்துவிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர். அன்று எதியூரப்பாவுக்காக எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த அதே சபாநாயகர் போபையாதான் இன்று எதியூரப்பாவின் ஆதரவாளர்களையும் தகுதி நீக்கம் செய்வாரா என்பது தெரியவில்லை.
ஆட்சியைத் தக்க 'எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்' என்ற ஆயுதத்தை பயன்படுத்துவது கர்நாடகா அரசியலில் வாடிக்கையாகிப் போய்விட்டது!