ஈரானில் வீடுகளையே சர்ச்சாக்கி பிரச்சாரம்: அமெரிக்க பாதிரியாருக்கு 8 ஆண்டு சிறை
இடாஹோ: ஈரானில் வீடுகளையே தேவாலயங்களாக ஆக்கி மதப் பிரச்சாரம் செய்து வந்ததற்காக கைது செய்யப்பட்ட அமெரிக்க பாதிரியாருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த சயீத் அபெடினி அமெரிக்காவின் இடாஹோ மாவட்டத்தில் உள்ள பாய்ஸில் வசித்து வந்தார். இந்நிலையில் ஈரான் சென்ற அவர் அங்குள்ள வீடுகளையே தேவாலயங்களாக மாற்றி மதப் பிரச்சாரம் செய்து வந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து ஈரான் போலீசார் அவரை கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஈரான் நாட்டின் பாதுகாப்பு சட்டங்களை குறைத்து மதிப்பிட்டு மதப்பிரச்சாரம் செய்ததாகக் கூறி அபெடினிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அரசு அபெடினியின் குடும்பத்துடன் தொடர்பில் இருந்து வருகிறது. சர்வதேச மத உரிமை சுந்ததிரத்தை ஈரான் தொடர்ந்து அவமதித்து வருவதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.