இந்த நாட்டுக்கு இப்போதைய முக்கியத் தேவை நல்லாட்சிதான் - மோடி
டெல்லி வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அங்குள்ள பிரபலமான டெல்லி ஸ்ரீராம் வர்த்தகக் கல்லூரியில் உரையாற்றினார். இந்த கூட்டத்தில் யாரை சிறப்பு விருந்தினராக அழைப்பது என்பதை கருத்துக் கணிப்பு நடத்தி கல்லூரி நிர்வாகம் தேர்வு செய்ததாம். அதில் மோடிக்கு அதிக ஆதரவு கிடைத்ததால் அவரையே அழைத்தனர்.
இந்தக் கருத்துக் கணிப்பில் மோடிக்கு முதலிடம் கிடைத்ததாம். ரத்தன் டாடா இரண்டாவது இடத்தில் வந்துள்ளார். மேலும் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் இந்தக் கருத்துக் கணிப்பில் இடம் பெற்றனர். ஆனால் மோடி அனைவரையும் விட பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் இருந்தாராம்.
ஸ்ரீராம் கல்லூரியில்தான் பாஜக மூத்த தலைவரும்,ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜேட்லியும் படித்தார்.
நல்லாட்சி தேவை
நான் குஜராத்திலிருந்து வந்துள்ளேன். காந்தியும் வல்லபாய் படேலும் பிறந்த மண்ணிலிரு்நது வந்துள்ளேன். சுதந்திர இந்தியாவாக இந்த நாடு உருவாவதற்காக பல தலைவர்கள் சிறையில் தங்களது வாழ்க்கையைக் கழித்துள்ளனர், முடித்துள்ளனர்.
அகிம்சை மற்றும் ஆயுதப் புரட்சி ஆகிய இரு பிரிவு போராட்டங்கள் நமது சுதந்திரப் போராட்டத்தை நடத்திச் சென்றன.
பல தலைவர்கள் சுதந்திரத்திற்காக உயிரைத் தியாகம் செய்தனர். 60 ஆண்டுகளாகியும், இந்தியா இன்னும் முழுமையான சுதந்திரத்திற்காக ஏங்கியபடிதான் உள்ளது.
<center><center><center><iframe width="600" height="338" src="http://www.youtube.com/embed/LwL6zIecOjU" frameborder="0" allowfullscreen></iframe></center></center></center>
இந்தியாவை முழுமையான வளர்ச்சிப் பாதையில் நாம் நிறுத்த வேண்டும் என்றால் முழுமையான சுதந்திரம்தான் நமது இலக்காக இருக்க வேண்டும்.
முழுமையான சுதந்திரம் என்று நான் சொல்வது அருமையான அரசாட்சி, நல்லாட்சி. அரசுக்காக மக்கள், மக்களுக்காக அரசு என்று அது இருக்க வேண்டும்.
ஆனால் இந்தியாவில் இதுவரை இருந்த அரசுகள் எல்லாமே தீயணைப்பு வீரர்களே போலவே இருந்துள்ளன. எல்லோரிடமும் ஒருவித நம்பிக்கையின்மை காணப்படுகிறது. அனைவரும் எப்படியாவது தப்பித்து ஓடினால் போதும் என்ற எண்ணத்தில் உள்ளனர்.
குஜராத்தில் நான்காவது முறையாக நான் முதல்வராக இருக்கிறேன். இந்த அனுபவத்தைச் சொல்கிறேன், தற்போது உள்ள வசதிகளை வைத்தும் கூட நாம் சிறந்த முன்னேற்றத்தை அடைய முடியும், உயர முடியும்.
நான் பாசிட்டிவாக சிந்திப்பவன். மாற்றத்தை எந்தச் சூழலிலும் மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நம் முன் உள்ள சந்தர்ப்பங்களை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும். இளைஞர்களை முன்வைத்து நாம் செயல்பட வேண்டும். உலகிலேயே அதிக அளவிலான இளைஞர்கள் நம்மிடம்தான் உள்ளனர்.
இத்தனை பேர் இங்கிருந்தும் நாம் சாதிக்க முடியாமல் திணறுகிறோம். நாம் நிச்சயம் ஏழை நாடல்ல. நம்மிடம் இயற்கை வளங்கள் அபரிமிதமாக உள்ளது. அதை நாம் சரியாக பயன்படுத்துவதில்லை. நம்முன் உள்ள சவாலே அதுதான்.
விவசாயம், தொழில்துறை, சேவைப் பிரிவு ஆகிய மூன்று துறைகளை நாம் முன்னேற்றியுள்ளோம். அதில் ஒன்று சாய்ந்தால் கூட மற்ற இரண்டும் நமது பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்க முடியும்.
குஜராத்தில் தண்ணீர்ப் பஞ்சம் பிரபலமானது. ஆனால் இன்று விவசாயத்தில் கொடி கட்டிப் பறக்கிறோம். ஆண்டுதோறும் விவசாயிகள் திருவிழாவை நான் நடத்துகிறேன். விவசாயிகள் சந்தோஷமாக உள்ளனர்.
உற்பத்தியைப் பெருக்குவது எப்படி என்று நாங்கள் விவசாயிகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறோம். தனது மண் எப்படிப்பட்டது, அதில் என்ன போட முடியும், விளைச்சல் எப்படி இருக்கும் என்பதை ஒவ்வொரு விவசாயியும் தனது விரல் நுனியில் வைத்திருக்கிறார்.
தண்ணீரை சேமிப்பது, பாதுகாப்பது எப்படி என்பதை நாங்கள் வெறுமனே சொல்லாமல், செய்து காட்டி வருகிறோம். குஜராத்தில் மட்டும்தான் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தபடி இருக்கிறது.
டெல்லியில் வசிப்போர் குஜராத்திலிருந்து வரும் பாலைத்தான் குடிக்கின்றனர். ஐரோப்பாவில் போய் நீங்கள் ஏதாவது சாப்பிட்டால் கூட அதிலும் குஜராத்தின் பங்கு இருக்கும்.
குஜராத் - மகாராஷ்டிரா எல்லைப் பகுதி மக்கள் என்னை வந்து பார்த்து, நாங்கள் வாழை பயிரிடுகிறோம். பின்லாந்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். ஆனால் சாலைகள் சரியில்லை. சாலை போட்டுக் கொடுங்கள் என்றார்கள். நாங்கள் உடனே போட்டுக்கொடுத்தோம். இப்போது அவர்களிடமிருந்து எந்தப் புகாரும் இல்லை என்றார் மோடி.
குஜராத்தை தான் எப்படியெல்லாம் முன்னேற்றினார் என்பது குறித்து அதிக அளவில் மோடி பேசினார்.
மோடிக்கு எதிர்ப்பு- போராட்டம்
இதற்கிடையே, டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர் சங்கங்கள் சார்பி்ல மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடியை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி ஸ்ரீராம் கல்லூரிக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தவும் அவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி கல்லூரிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைப் போலீஸார் தண்ணீர் குண்டுகளைப் பாய்ச்சிக்கலைத்து விரட்டினர்.