இன்று சட்டசபைக்கு சென்ற 14 திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பென்ட்!
சென்னை: தமிழக சட்டசபையில் துணை சபாநாயகரை முற்றுகையிட்டதால் இன்று சபைக்கு சென்ற 14 திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத் தொடர் முழுவதற்கும் கூண்டோடு சஸ்பென்ட் செய்யபட்டுள்ளனர்.
சட்டசபையில் அமைச்சர் முனுசாமி இலங்கை தமிழர் விவகாரம் குறித்து பேசுகையில் திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் எம்.பி.யான கனிமொழியைப் பற்றியும் விமர்சித்திருந்தார். அவரது பேச்சை சபைக் குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை திமுகவின் முற்றுகையிட்டனர். தொடர்ந்தும் அவையில் முழக்கங்களை எழுப்பியதால் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டன்ர்.
இதைத் தொடர்ந்து சட்டசபையின் மாண்பைக் குலைக்கும் வகையில் நடந்து கொண்டதால் இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் இன்று சபைக்கு சென்ற 14 திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சஸ்பென்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
அவர் சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பில், சட்டசபை நடவடிக்கைகளில் இன்று கலந்து கொண்ட திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அவை மரபுகளை மீறி பேரவையின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் நடந்து கொண்டனர். வன்முறையை தூண்டும் விதத்திலும் அவர்களின் நடவடிக்கை இருந்தது.
எனவே, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், அவையின் கண்ணியத்தை காக்க வேண்டியதும். அவசியம். இன்றைய கூட்டத்தில் பங்கேற்று பிரச்சினைக்கு காரணமாக இருந்த திமுக எம்எல்ஏக்கள் ஏற்கனவே இரண்டு முறை அவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அவர்களது நடவடிக்கை காரணமாக இப்போது மூன்றாவது முறையாக வெளியேற்றப்பட்டுள்ளனர். எனவே இந்த கூட்டம் தொடர் முழுவதும் அவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடுகிறேன் என்றார்.
அதனால் திமுக கொறடா சக்ரபாணி, எம்எல்ஏக்கள் சுப.தங்கவேலன், ஜெ. அன்பழகன், தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், டி.ஆர்.பி. ராஜா, கம்பம் ராமகிருஷ்ணன் உள்பட இன்று சட்டசபைக்கு வந்திருந்த 14 திமுக எம்எல்ஏ.கள் நாளை சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்க இயலாது.
தற்போதைய கூட்டத் தொடர் நாளை முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.