மு.க.ஸ்டாலினை எதிர்க்கும் குஷ்பு ஒரு அரைவேக்காடு: வாகை சந்திரசேகர் காட்டம்
ஸ்டாலின்தானா?
திமுகவின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலின் முன்மொழியப்படுவார் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியிருந்த நிலையில் இதுபற்றி நடிகை குஷ்பு சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அவர், கட்சியின் அடுத்த தலைவர் மு.க. ஸ்டாலின்தான் என்று நாமே ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது. எனக்கு பிறகு சமூக பணிகளை தளபதி செயல்படுத்துவார் என்றுதான் தலைவர் சொல்லி உள்ளார். தி.மு.க. தலைவரை தேர்வு செய்ய வாய்ப்பு கிடைத்தால் தளபதிதான் அவருடைய தேர்வு என்று சொல்லி உள்ளார்.ஆனால் இறுதி முடிவை பொதுக்குழுதான் எடுக்கும். தலைவர் மட்டுமே முடிவு எடுத்துவிட்டதால் அடுத்த தலைவர் தளபதியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று கூறியிருந்தார்.
அரைவேக்காடு குஷ்பு
குஷ்புவின் இந்த சலசலப்பான கருத்துக்கு தி.மு.க. பேச்சாளரான நடிகர் வாகை சந்திரசேகர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் சந்திரசேகர், மு.க.ஸ்டாலின் பற்றி குஷ்பு சொன்ன கருத்துகள் அதிர்ச்சி அளிக்கின்றன. குஷ்பு தி.மு.க.வுக்கு நேற்று வந்தவர். தி.மு.க. பற்றியோ மு.க.ஸ்டாலின் பற்றியோ பேச அவருக்கு அருகதை இல்லை. தலைவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதுதான் கட்சியின் கொள்கை.
மு.க.ஸ்டாலின் 16 வயதிலேயே தி.மு.க. இளைஞர் அமைப்பை உருவாக்கினார். தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். போராட்டங்களில் ஈடுபட்டார். இவையெல்லாம் குஷ்பு சமூக பணி என்கிறாரா? மிசாவில் கைதானது சமூக பணியா? தி.மு.கவில் சமூக பணி என்பது கட்சி பணிதான். அரை வேக்காட்டுத்தனமாக குஷ்பு பேசுகிறார். தளபதிதான் அடுத்த தலைவர் என்று கலைஞர் எடுத்த முடிவை ஏன் எதிர்க்க வேண்டும். அவர் பேச்சு கட்சி கட்டுப்பாட்டை மீறுவதாக உள்ளது. ஸ்டாலின் பற்றி பேசியதற்காக குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் அவர்.