ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு- தமிழகம் முழுவதும் போராட்டங்கள்!
பல லட்சம் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பது தமிழக கட்சிகளின் கோரிக்கை. ஆனால் இந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து தொடர்ந்தும் ராஜபக்சேவை அனுமதித்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு கட்சிகளின் சார்பாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சென்னை இலங்கை தூதரகம் முற்றுகை
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை மக்கள் விடுதலைக் கட்சியினர் 50 பேர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கச்சத்தீவை மீட்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல் சென்னை கொருக்குப்பேட்டையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
ஓசூரில் ரயில் மறியல்
ராஜபக்சேவின் வருகையைக் கண்டித்து ஓசூரில் தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியினர் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். பெங்களூரில் இருந்து கோவை சென்ற ரயிலை அவர்கள் மறிக்க முயன்றபோது போலீஸார் அவர்களைத் தடுத்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டோர் போலீசாரைத் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டம் நடத்திய 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கடலூரிலும் ரயில் மறியல் போராட்டத்தை தமிழ்த் தேசிய அமைப்புகள் இன்று நடத்தின.
வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு
ராஜபக்சே வருகைக்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களைப் புறக்கணித்தனர். மேலும் நீதிமன்றங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
கோவையில் கொடும்பாவி எரிப்பு
கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று 3-வது நாளாக ராஜபக்சேவின் வருகைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இன்றும் ராஜபக்சேவின் கொடும்பாவி எரிக்கப்பட்டன.