அப்சல் குருவுக்கு தூக்கு - காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு
முகமது அப்சல் குரு என்ற இயற்பெயர் கொண்ட இவன் ஜெய்ஷி இ முகம்மது என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன். அத்துடன் லக்ஷர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷி இ முகம்மது ஆகிய பயங்கரவாத இயக்கங்கள் ஆதரவில் 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்தான்.
பின்னர் 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட அப்சல் குருவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு 2004ம் ஆண்டு உச்சநீதிமன்றம் இவருக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. பல்வேறு அப்பீல்களைக் கடந்து 2006ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி அப்சல்குருவிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜனவரி இறுதியில் மனு நிராகரிக்கப்பட்ட தகவலை மத்திய அரசு இன்று வெளியிட்டது. தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டில்லி குண்டுவெடிப்பு
இந்த அப்சல் குரு மீது 2001ம் ஆண்டு பார்லிமென்ட் தாக்குதல் மட்டுமின்றி அதற்கு முன் டில்லியில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்கும் இவனே காரணம் என உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கில் கண்ணால் கண்ட 8 சாட்சிகளும், பிற சாட்சிகளும் விசாரிக்கப்பட்டன. இவர்களில் 10 பேர் அப்சல்குருவிற்கு எதிராக சாட்சியம் அளித்தனர். சட்டப்பிரிவு 121, 121 ஏ, 122, 120 பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கீழ் அப்சல்குரு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
டில்லி ஹைகோர்ட்டில் குண்டு வெடிப்பு
அவ் வழக்குகளில் அப்சல்குருவிற்கு ஆயுள் தண்டனை விதிக்க 8 கோர்ட்டுகள் தீர்ப்பளித்தன. இருப்பினும் டில்லி ஐகோர்ட்டில் இவ்வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்டது. அதே சமயம் அப்சல்குருவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதி டில்லி ஹைகோர்ட் வளாகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் 11 பேர் பலியாகினர். மேலும் 76 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் 2010ம் ஆண்டு ஜூன் மாதம் 23ம் தேதி அப்சல்குருவின் கருணை மனுவை நிராகரிக்குமாறு ஜனாதிபதிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்தது. 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அப்சல்குருவின் மனுவை நிராகரித்தது. கடந்த ஜனவரி மாத இறுதியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அப்சல் குருவின் கருணை மனுவை நிராகரித்தார். இதனைத் தொடர்ந்து திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு
அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை தொடர்ந்து அவரது சொந்த மாநிலமான ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்சல் குருவை தூக்கிலிட காஷ்மீரில் இருந்த சில தீவிரவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன இதனையடுத்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாதவகையில் தவிர்க்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், அப்சல் குரு தூக்கில் இடப்பட்ட செய்தியைக் கேட்டவுடன், சில பிரிவினைவாத அமைப்புகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.