எனக்கு அனைத்து நாடுகளிலுமே எதிர்ப்பு இருக்கே..! - ராஜபக்சே ' பெருமிதம்'

இலங்கை அதிபர் மகிந்தர் ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், டெல்லி, பீகாரில் நேற்று கடும் போராட்டங்கள் நடைபெற்றன. இத்தனை எதிர்ப்புகளுக்கும் மத்தியில் பீகார் வந்த அவர் புத்தகயாவில் வழிபாடு நடத்தினார். பின்னர் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு நேற்று மாலை வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக திருமலையை சென்றடைந்தார். வழியெங்கும் அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருமலையில் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் அவர் தங்கியிருந்தார்.
பின்னர் அதிகாலை 3 மணிக்கு ராஜபக்சேவும் அவரது குழுவினரும் திருப்பதியில் சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். சுமார் ஒரு மணிநேரம் கோயிலில் தரிசனம் செய்தார்.
தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த ராஜபக்சே செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்துள்ளேன். ஏழுமலையானை தரிசனம் செய்தது எனக்கு மனநிம்மதி அளிக்கிறது. எனக்கு எல்லா நாட்டிலும் எதிர்ப்பு உள்ளது. இதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றார்.
இதைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கார் மூலம் ரேணிகுண்டா சென்று அங்கிருந்து கொழும்பு புறப்பட்டு சென்றார்.
போராட்டம்
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமலை ஜி.என்.சி. டோல்கேட், பத்மாவதி விருந்தினர் மாளிகை அருகில் ம.தி.மு.க.வினர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் ராஜபக்சேயின் உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர். அவரை கண்டித்து முழக்கமிட்டனர்.












Click it and Unblock the Notifications