இங்கிலாந்தில் 182 வாட்டி அபேஸ் பண்ண பலே திருடிக்கு 2 ஆண்டு சிறை
இங்கிலாந்தில் உள்ள நியூ காஸில் கிரவுன் நீதிமன்றம் சன்டர்லேண்டைச் சேர்ந்த 32 வயதாகும் கிளெய்ர் மெக்கார்வா என்ற திருட்டுப் பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கிளெய்ர் சாதாரண பெண் அல்ல இதுவரை 182 முறை திருடி சிக்கியுள்ளார். அவருக்கு திருந்த பல முறை வாய்ப்பு அளித்தும் அவர் அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை. சிறையில் இருந்து விடுதலையான இரண்டாவது வாரத்தில் அவர் ஒரு கம்ப்யூட்டரை திருடியதுடன் ஒரு கடையில் இருந்து ரூ. 33,831 மதிப்புள்ள பொருட்களை திருடினார்.
இதையடுத்து போலீசில் சிக்கிய அவர் நியூ காஸில் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஜேம்ஸ் காஸ் கிளெய்ரைப் பார்த்து, உங்களை குற்றச் செயல் செய்வதில் இருந்து தடுக்க போலீசார், புரபேஷன் ஆபீசர் மற்றும் நான் முயற்சி செய்து தோல்வி அடைந்துவிட்டோம். உங்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என்றார்.
போதைப் பழக்கம் உள்ள கிளெய்ர் கடந்த செப்டம்பர் மாதம் சிறை தண்டனையை முடித்து வெளியேறிய பின்னர் சன்டர்லேண்ட் மியூசியத்தில் இருந்து ஒரு லேப்டாப்பை திருடியுள்ளார். இந்த சம்பவம் நடந்து 4 நாட்கள் கழித்து ரூ.1,014 மதிப்புள்ள டியோடரன்ட் மற்றும் ரூ.4,500 மதிப்புள்ள சத்துணவு பொருட்கள் ஆகியவற்றை திருடியுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதி ரூ. 26,278 மதிப்புள்ள டிவிடிக்கள், வாட்ச்சுகளை திருடினார். ஜனவரி 4ம் தேதி ரூ.2,956 மதிப்புள்ள பலசரக்கு பொருட்களை திருடினார். இது தவிர ஒரு கடையில் இருந்து ரூ. 25,319 மதிப்புள்ள உணவுப் பொருட்கள், ஐஸ்லாந்தில் இருந்து ரூ. 2,194 மதிப்புள்ள உணவுப் பொருட்கள் மற்றும் அஸ்டாவில் இருந்து ரூ. 33,422 மதிப்புள்ள டிவியை திருடியுள்ளார். இத்தனை பொருட்களையும் திருடியதாக அவர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.
அவரை திருந்துமாறு கூறி கூறி அலுத்துப் போன நீதிபதி இறுதியில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.