மாணவியை ‘விபசாரி’ என்று கூறிய ஹைகோர்ட் நீதிபதிக்கு எதிராக வழக்கு!
திருவனந்தபுரம்: சூரியநெல்லி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியை விபசாரி எனவும், அவர் விபசார தொழில் செய்து வந்ததால், கற்பழிப்பு குற்றம் ஆகாது எனவும் ஹைகோர்ட் முன்னாள் நீதிபதி, கூறிய தீர்ப்பு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதிக்கு எதிராக வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள சூரியநெல்லி கற்பழிப்பு வழக்கில் தீர்ப்பு கூறிய ஹைகோர்ட்டின் முன்னாள் நீதிபதிகளில் ஒருவரான வசந்த், ‘‘வழக்கில் தொர்புடைய மாணவி விபசார தொழில் செய்து வந்ததால், கற்பழிப்பு குற்றம் ஆகாது'' என்று தீர்ப்பு கூறியிருந்தார். அத்துடன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தியும் இருந்தார்.
நீதிபதியின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரளாமாநில சட்டப்பேரவையிலும், நீதிபதிக்கு எதிரான கருத்துக்களை எதிர்க்கட்சிகள் கூறினர்.
இதற்கிடையில் அவருடைய இந்த கருத்தை எதிர்த்து அவதூறு வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு அனுமதி வழங்கும்படி, கேரள மாநில அரசு தலைமை வக்கீலிடம், எம்.பிரகாஷ் என்பவர் மனு தாக்கல் செய்து இருக்கிறார்.
பிரகாஷ் தாக்கல் செய்துள்ள மனுவில், "நீதிபதி வசந்த் தெரிவித்த கருத்துகள் பொறுப்பற்றவை. அவர் வகித்து வந்த ஹைகோர்ட் நீதிபதி பதவியின் கண்ணியத்துக்கு பொருத்தமானவை அல்ல. இது, நீதித்துறைக்கு எதிரான கிரிமினல் அவதூறு" என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். பிரகாஷ், ஹைகோர்ட்டின் முன்னாள் ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications