பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மாணவி குடும்பத்துக்கு சரத்குமார் உதவி
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே கிளாக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். மனைவி பேச்சியம்மாள். இவரது மூத்த மகள் புனிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20ம்தேதி பள்ளிக்கூடம் செல்லும் வழியில் காட்டுப்பகுதிக்குள் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்து விட்டார்.
இப்பிரச்சினையை அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தும், புனிதாவின் குடும்பத்திற்கு நிதியுதவி செய்து வருகின்றனர்.
இவ்வழக்கு சம்மந்தமாக செய்துங்கநல்லூர் போலீசார் தூத்துக்குடி மாவட்டம் பாறைகுட்டம் கிராமத்தை சேர்ந்த முத்தையா என்பவனை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்துள்ளனர்.
செய்துங்கநல்லூர் போலீசார் இவ்வழக்கு சம்பந்தமாக 200 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் இக்கிராமத்திற்கு வந்தார்.
பேச்சியம்மாளையும், அவரது தாயாரையும், புனிதாவின் தங்கையையும் அவர்கள் வீட்டில் சந்தித்து ஆறுதல் கூறினார். பி்ன்னர் புனிதாவின் படத்திற்கு மாலை அணிவித்தார். அப்போது நிதியுதவி ரூ.50 ஆயிரம் வழங்கினார். பின்னர் அக்கிராமத்தில் அமைத்திருந்த மேடையில் அமர்ந்து பொதுமக்களிடம் அவர் பேசுகையில்,
புனிதாவின் கொலை கண்டனத்திற்குரியது. கணவனை இழந்த பேச்சியம்மாள் இப்போது தன் மகளையும் இழந்திருப்பது கொடியதாகும். நாம் நடந்து முடிந்தவைகளை பார்க்காமல் அவரது தங்கை ரோகினியை நன்கு படிக்க வைத்து அவரது குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருப்போம்.
இப்போது சுமார் ஒன்றரை மாதங்கள் கழித்து இங்கு வந்து நிதியுதவி செய்துள்ளேன். தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சியில் கொலைகாரனுக்கு கண்டிப்பாக தூக்கு தண்டனை கிடைப்பது உறுதி.
எனவே நீங்கள் நடந்து முடிந்தவைகளை விட்டு இனி நடக்க உள்ள காரியங்களை கவனிக்க வேண்டும். டெல்லியில் நடந்த சம்பவத்தையும், இதையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். அரசு உதவி குறித்து அமைச்சர் செல்லப்பாண்டியன் இங்கு வந்து சென்றுள்ளார். அவரிடமும் நான் தெரிவிக்கிறேன். முதலமைச்சரிடமும் நான் இதுகுறித்து பேச உள்ளேன்.
நாம் இறந்து போன புனிதாவின் குடும்ப வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்போம் என்றார் சரத்குமார்.