சென்னையில் ஜிலுஜிலு மழை...தென் மாவட்டங்களும் குளிர்கின்றன
கன்னியாகுமரி அருகே அரபிக் கடலில் வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவானது. அது மேலும் வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
மதுரை, ராஜாபாளையம், விருதுநகர், டி.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி திருமங்கலம், திண்டுக்கல், தேனி, சிவங்கை, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று பகலில் நல்ல மழை பெய்தது.
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பரவலாக பெய்த மழை பூமியை குளிர்வித்துள்ளது. அதிகபட்சமாக ராதாபுரத்தில் 63 மி.மீ. மழையும் பாபநாசம், அம்பையில் 55 மில்லி மீட்டர் மழையும் பதிவானது. கடந்த ஆண்டு கோடை வெப்பம் அதிகபட்சமாக 108 டிகிரி வரை பதிவானது. இந்த ஆண்டு கோடையை இப்போதே வரவேற்கும் விதமாக கடந்த 2 வாரங்களாக வெயிலின் அளவு அதிகரித்து வந்தது.
நேற்று முன்தினம் பிற்பகலில் இருந்து வானத்தில் கருமேகம் திரண்டு, அவ்வப்போது சாரல் மழை பெய் தது. இரவு மற்றும் நேற்று அதிகாலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை கொட்டியது. மெஞ்ஞானபுரம், உடன்குடி உள்ளிட்ட சில பகுதிகளில் 3 மணி நேரம் நல்ல மழை பெய்தது. நெல்லையில் பாவூர்சத்திரம், ஆலங்குளம், சேரன்மகாதேவி, பாபநாசம், அம்பாசமுத்திரம், வள்ளியூர் உள்ளட்ட பகுதிகளில் அதிகாலை பரவலாக மழை பெய்தது.
மதுரையில் நேற்று முன்தினம் பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு நேரத்தில் மழைத்துளிகள் பெரிய அளவில் விழுந்தது. தொடர்ந்து மதுரையில் நேற்று காலையில் சுமார் ஒரு அரைமணி நேரம் நல்ல மழை பெய்தது. ஒரு சில இடங்களில் கால்மணி நேரம் மழை பெய்தது.
குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலையில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை இருந் தது. இதற்கிடையே நேற்று அதிகாலை 2 மணியில் இருந்து குமரி மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இடி, மின்னலும் இருந்தது. நகர்ப்புற பகுதிகள் மட்டுமின்றி மலை பகுதிகளிலும் மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடலில் சூறை காற்று காரணமாக நேற்று காலை பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வில்லை. நாட்டுப்படகு, பைபர் படகுகளில் மீன்பிடிக்க சென்றவர்கள் அவசர, அவசரமாக கரை திரும்பினர். சூறை காற்றால் மீனவர்களின் படகுகள் சேதம் அடைந்தன. சூறைக்காற்று: குமரி மாவட்டம் களியக்காவிளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மழையுடன் சூறைக்காற்றும் வீசியது. இதில் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. களியக்காவிளை அருகே உள்ள பெருங்குளம் ஏலா பகுதியில் வாழைகள் முறிந்து விழுந்தன.
திருவாரூர், நாகை மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் வழக்கமாக 4.25 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி நடைபெறும். இந்தாண்டு தண்ணீர் பற்றாக்குறை காரணமாக 3 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கரில் மட்டும் சாகுபடி செய்யப்பட்டருந்தது. பருவ மழை பொய்த்தது, கர்நாடகா காவிரி நீரை தராதது போன்ற காரணங்களால் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் கருகி விட்டது.
மீதி வயல்களில் ஆற்று நீர், பம்பு செட் நீர் மற்றும் மற்றவர்களிடமிருந்து பம்பு செட் நீரை கடன் வாங்கி விவசாயிகள் போராடி பயிரை காப்பாற்றினர். தற்போது 2.10 லட்சம் ஏக்கரில் அறுவடை நடந்து வந்தது. 1 லட்சம் ஏக்கர் பயிர் அறுவடைக்கு தயாராக வில்லை. நேற்று பெய்த மழையால் அறுவடை பணி பாதித்தது. எந்திரம் மூலம் அறுவடை செய்து வயல்களிலேயே கொட்டப்பட்டுள்ள நெல் நனைந்துள்ளது.
வயல்களில் சேகரிக்காமல் இருந்த வைக்கோல் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது. இந்த வைக்கோலை கால்நடைகளுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் கதிர் முற்றி சாய்ந்துள்ள பயிர்களில் உள்ள நெல் மணிகள் முளைக்க தொடங்கிவிடும் என விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று மழை
தலைநகர் சென்னையில் நேற்று மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வானம் வறண்டு கிடந்தது. இந்த நிலையில் இன்று காலையே மேகமூட்டமாக காணப்பட்டது. பள்ளிக்கு லீவு கிடைக்கும் போலிருக்கே என்று பிள்ளைகளெல்லாம் மகிழும் அளவுக்கு வானம் கருத்துக் கிடந்தது. ஆனால் கரெக்டாக அத்தனை பேரும் பள்ளிகளுக்குப் புறப்பட்டுப் போன பின்னர் மழை வந்தது.
சீராகவும், நிதானமாகவும் பெய்து வரும் மழையால் சென்னை நகரம் குளிர்ந்து போயுள்ளது.