அணு ஆயுத ஏவுகணை சோதனையை மீண்டும் நடத்தியது பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத்: அணு ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய மற்றொரு ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் இன்று நடத்தியிருக்கிறது. கடந்த 4 நாட்களில் 2-வது முறையாக ஏவுகணை சோதனையை நடத்தியிருக்கிறது பாகிஸ்தான்.
ஹட்ப்-9
ஹட்ப்-9 ரக ஏவுகணைகளை அண்மைக்காலமாக பாகிஸ்தான் தயாரித்து வருகிறது. இதன் முதல் சோதனை கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது. இந்த வகை ஏவுகணைகள் நவீன தொழில்நுட்பத்துடன், அணு ஆயுதங்களை சுமந்து சென்று குறித்த இலக்கை தகர்க்கும் திறன் கொண்டவையாகும். கடந்த சில நாட்களுக்கு முன்பாக குறைந்த இலக்கான 60 கிலோ மீட்டர் தூரம் செல்லும் புதிய ஏவுகணை சோதனையை நடத்தியது. இது வெற்றிகரமாக நடந்ததாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்தது.
ஹட்ப்-II
இந்நிலையில் ஹட்ப்- II ஏவுகணை சோதனையை இன்று நடத்தியது பாகிஸ்தான். இது 180 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை தாக்கக் கூடியதாகும். இந்த ஏவுகணை சோதனைக்கு அந்நாட்டு அதிபரும் பிரதமரும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த மாதம் முதல் ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இருநாடுகளிடையே அடிக்கடி மோதல் நடைபெறும் நிலையில் பாகிஸ்தான் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.