பொட்டு கொலைக்கு 'ஸ்கெட்ச்' போட்டது 'சப்பாணி' முருகன்? துருவும் போலீஸ்

'சப்பாணியை' சந்தித்த சந்தானம்:
ஜனவரி 31ம் தேதி இரவு 7.40 மணிக்கு பொட்டு சுரேஷ் கொலை நடந்தது. அதேநாளன்று காலை மதுரை ஜே.எம். 4-வது கோர்டுக்கு வழக்கு விஷயமாக பிரபல ரவுடி சப்பாணி முருகன் வந்தார். அப்போது பொட்டு கொலையில் சரண்டராகியுள்ள சந்தானமும் வேறு சிலரும் முருகனுடன் கோர்ட் வளாகத்தில் நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தார்களாம்.
கொலை சம்பவத்துக்குப் பிறகு சரண் அடைந்த ஆட்களின் படத்தைப் பார்த்த போலீஸார், முருகனுடன் சந்தானம் பேசியதை உறுதிபடுத்தி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து இருக்கின்றனர்.
ஸ்கெட்ச் போட்டது முருகனா?:
முருகனுக்கு சட்ட ஆலோசனை தரும் பிரமுகர் ஒருவர், பொட்டு கொலையில் சரண் அடைந்தவர்கள் விஷயத்தில் அதீத ஆர்வம் காட்டியது போலீஸுக்கு சந்தேகத்தை அதிகரித்து இருக்கிறது. இதை எல்லாம் வைத்து, பொட்டு சுரேஷ் கொலையில் முருகன் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தாரா? அல்லது வேறு ஏதாவது தொடர்பு இருக்குமா? என்று ஜெயில் ஏரியாவை உள்ளடக்கிய செல்போன் டவரை செக் செய்து இருக்கிறார்கள்.
செல்போன் வழியாக தகவல் பரிமாற்றம் நடைபெறாவிட்டால், கொலை நடப்பதற்கு முன்பாக முருகனை நேரில் சந்தித்துப் பேசியவர்கள் யார் யார் என்றும் சிறைச்சாலை பதிவேடுகளை துருவி வருகின்றனர் போலீசார்.
பல லட்சம் வசூலாகும்
எஸ்.ஐ. கொலை வழக்கு, வழுக்கை முனுசு கொலை, மேட்டூர் அணை ஏரியாவில் நடந்த கொலை உட்பட பல்வேறு செயின் பறிப்பு சம்பவங்களில் சப்பாணி முருகன் ஈடுபட்டதாக போலீஸ் கூறுகிறது. இப்பொழுதும் சப்பாணி முருகன் பெயரைச் சொன்னால் மதுரை பகுதியில் தொழிலதிபர்களிடம் பல லட்சம் வசூல் ஆகுமாம். இவன் பெயரைச் சொன்னாலே அவர்களிடம் அவ்வளவு பயம் பரவிக் கிடக்கிறது.
அட்டாக் எங்கேப்பா?
இந்தக் கொலை வழக்கில் முக்கியமாக சந்தேகிக்கப்படும் அட்டாக் பாண்டி எங்கே என்பதுதான் இப்போது போலீசின் முக்கியத் தேடல். அவர் மும்பையில் இருக்கிறாரா? அல்லது இலங்கைக்கு தப்பிவிட்டாரா? என்று தேடுதலை தொடங்கியுள்ளனர். ஆனால் அட்டாக் பக்கத்து மாநிலத்தில்தான் இருக்கிறார் என்கின்றனர் அவரது நண்பர்கள்.
மேலும் மதுரையிலிருந்து 40க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளோடுதான் கிளம்பிச் சென்றுள்ளார் அட்டாக். முதலில் அவரது மூன்று செல்போன் நம்பர்களை மட்டும் கையில் வைத்துக்கொண்டு ட்ரேஸ் பண்ணியது போலீஸ். இப்போது அவை ஸ்விட்ச்-ஆப் நிலையில் இருக்கின்றன.
மென்மையான கவனிப்பு
அட்டாக் சிக்கும் வரை இப்போது சரணடைந்தவர்களுக்கு மென்மையான கவனிப்புதான் இருக்கும் என்கின்றனர். முதலில் ஏழுபேர், இப்போது அட்டாக்கின் அக்காள் மகன் விஜயபாண்டி, ஆரோக்கிய பிரபு என இருவர் சரணடைந்திருக்கின்றனர். இனி வழக்கின் போக்கு மாறும் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.
'அரசியல்' உண்டா?:
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் தேடப்படும் குற்றவாளிகள் தவிர, மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவரான வி.கே.குருசாமி போன்றவர்களை விசாரித்தனர் போலீசார். ஏனெனில் அழகிரி அணியில் இருந்த அட்டாக் பாண்டிக்கு, மு.க.ஸ்டாலினைச் சந்திப்பதற்கு அப்பாயின்மெண்ட் வாங்கிக் கொடுத்தவர் வி.கே.குருசாமி தான். இதற்காக அப்போது சென்னை ஹோட்டலில் ரூம் போட்டும் கொடுத்துள்ள்ர்.
அங்கு தங்கிய 7 நாட்களில் அட்டாக் செலவழித்தது ரூ.7 லட்சம். மேலும் அந்த விடுதியின் வீடியோ கேமராவில் வி.கே.குருசாமியும் சென்னையில் வந்தும் அட்டாக்கை சந்தித்தது பதிவாகியிருக்கிறது. இதையடுத்து குருசாமியிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அட்டாக் என்ன பேசினார்?
'பொட்டு சுரேஷ் கொலைக்கான ரிகர்சல் எங்கே நடந்தது? க்ளைமாக்ஸ் பேச்சுவார்த்தை சென்னை ஹோட்டலில்தான் நடந்ததா? அப்படி எனில் என்ன பேசப்பட்டது? யார் யார் ஸ்பான்ஸர்?' - இந்த மூன்று கேள்விகளைத்தான் 'அட்டாக்' ஆட்களிடம் தீவிரமாக போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
முக்கிய வாரிசு சிக்குவாரா?
''சமீபத்தில் சென்னை ஹோட்டலில் முக்கிய வாரிசுடன் 'அட்டாக்' என்ன பேசினார்?'' என்பதுதான் விஜயபாண்டியிடம் மதுரை போலீஸ் கேட்கப்போகும் கேள்வி! இதற்கு விஜயபாண்டி சொல்லப்போகும் பதிலில்தான் பொட்டு சுரேஷ் கொலை வழக்கின் அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் நடக்கும் என்று சொல்கிறது போலீஸ்.
மூன்று மாதங்களுக்கு முன், சென்னைக்கு வந்த 'அட்டாக்', பாண்டி பஜாரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் முக்கியமான சந்திப்பு நடந்ததை கட்சிப் பிரமுகர்கள் சொல்கிறார்கள். 'அட்டாக்'கும் அந்த முக்கிய வாரிசும் அந்தச் சந்திப்பில் நிறைய பேசினார்களாம்.
கடைசி பேச்சு யாருடன்?
இதேபோல் பொட்டு சுரேஷ் கொலை செய்யப்படுவதற்கு முன்பாக கடைசியாக செல்போனில் பேசியது யாருடன் என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தவிர, ''கோர்ட்டில் சரண் அடைந்தவர்கள்தான் கொலை நடந்த ஸ்பாட்டுக்கு வந்தவர்கள் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக மதுரை நகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் கூறியுள்ளார். மேலும் சம்பவம் நடந்த அன்று பிஸியான ரோட்டில் சுரேஷ் சென்ற காரை, கொலைக் கோஷ்டியினர் வேறு ஒரு காரில் பின்தொடர்ந்த காட்சி சி.சி.டிவி. கேமராவில் பதிவாகி இருக்கிறது.
நிச்சயமாக வெகு சீக்கிரமே கொலைக்கு காரணமானவர்களைக் கூண்டோடு பிடிப்போம். பொதுமக்கள் யாராவது சுரேஷ் கொலை தொடர்பாக தகவல் ஏதாவது தெரிந்தால், உடனே சொல்லலாம். அவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். போலீசார் செல்லும் வேகத்தைப் பார்த்தால் பொட்டு கொலையில் முக்கியமான கொலையாளிகளை விரைவில் நெருங்கிவிடுவார்கள் என்றே தெரிகிறது. அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர்தான் இது கோஷ்டி மோதல் கொலையா?, அரசியல் கொலையா? என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications