பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை மூன்றடி தூரத்தில் நிற்க வைத்து சுட்டுக் கொலை செய்திருக்கிறார்கள்
பாலகன் பாலச்சந்திரன் சேனல் 4 வெளியிட்டிருப்பதைப் போல, கொடூரமாக கொல்லப்பட்டிருந்தாலும், போரின் போது ராணுவத்தினரால் கொல்லப்பட்டிருந்தாலும் எப்படியும் அது கொலைதான். அப்படி கொலை செய்யப்படும் அளவிற்கு, அந்தப் பாலகன் செய்த குற்றம் என்ன?
இதற்கு சிங்கள அரசு உலகத்திற்குப் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும். எந்தவகையில் பார்த்தாலும் ராஜபக்சே ஒரு போர்க் குற்றவாளி என்பது ஊர்ஜிதமாகிறது. அதற்காக எந்த விசாரணையும் நடத்தத் தேவையில்லாமலே ஆதாரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே, ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் அமைக்கப்பட்ட மூவர் குழு, போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து விசாரித்து தண்டனை வழங்கப்பட வேண்டுமென்றே தெரிவித்திருப்பதையும் மனதிலே கொள்ள வேண்டும்.
இத்தகைய காட்டு மிராண்டித்தனமான செயலில் ஈடுபட்ட சிங்கள அரசுக்கு இந்திய அரசு இனியும் துணை போக வேண்டுமா என்பது தமிழக மக்களிடையே கேள்விக்குறியாக எழுந்துள்ளது.
கடந்த ஆண்டே, ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில், இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை வற்புறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், இலங்கை அரசு கடந்த ஓராண்டு காலத்தில் அதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
டெல்லியிலே உள்ள மனித உரிமை கண்காணிப்பகம், ஐ.நா. மனித உரிமை ஆணைய உறுப்பினர்களுக்கு அண்மையில் எழுதிய கடிதத்தில் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. சபை சுதந்திரமான, சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென்றும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. சபைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட வேண்டுமென்றும், இந்த முயற்சிக்கு ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவிக்க வேண்டுமென்றும் கடிதம் எழுதியுள்ளது.
எனவே இலங்கை அரசாங்கத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அமெரிக்கா போன்ற நாடுகள் முன் வரும்போது, இந்திய அரசு அந்தக் கருத்துக்கு வலுசேர்த்திட முன் வரவேண்டுமே தவிர, இலங்கை அரசைக் காப்பாற்றிட முயற்சி செய்யக்கூடாது. இதுதான் இன்று தமிழ் நாட்டு மக்களின் விருப்பம்; வேண்டுகோள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.